பதிவு செய்த நாள்
23
மே
2017
12:05
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் உருத்திரகோட்டீஸ்வரி சமேத உருத்திரகோட்டீஸ்வரர் கோவில், அறநிலையத்துறை அலட்சியத்தால் பராமரிப்பின்றி கிடக்கிறது.
பல்லவர் காலத்தைச் சேர்ந்த, புகழ்பெற்ற கோவிலாக, திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் மற்றும் பக்தவத்சலேஸ்வரர் கோவில் விளங்குகின்றன. சமய குரவர்கள் நால்வராலும், நான்கு வேதங்களிலும் இங்குள்ள சிவப்பெருமான் குறித்து பாடல்கள் பாட பெற்றுள்ளதால், இத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதன் உப கோவிலாக, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், உருத்திரகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், சங்க கால சிறப்புடையதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் ஆகியவை விமரிசையாக நடைபெறுகிறது. சிவாச்சாரியார்கள் மூலம் காலை, மாலை நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த, 2004ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோவிலின் ராஜ கோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், ராஜகோபுரம் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர். கோவிலின் அம்மன் சன்னதி விமானத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. கோவிலில் நித்திய பூஜைக்காக வைக்கப்பட்ட மலர் செடிகளுக்கான இரும்பு வேலிகள் சரிந்து காணப்படுகிறது. இக்கோவிலுக்கு வருவதற்கான வழிகாட்டி பலகைகள் மற்றும் நடை திறக்கும் அறிவிப்பு பலகைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. நேர்த்தியான கருங்கற்களால் ஆன இக்கோவிலின் பெருமையை வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் விளம்பரப்படுத்த வேண்டும். கோவிலின் பிரகாரத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் சுற்றி வர பக்தர்கள் அச்சப்படுகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள கிணறு, மேல்மூடி அமைக்காததால் மாசடைந்து கிடக்கிறது.
இக்கோவில் குளம் தொன்மையை விளக்கும் விதத்தில் உள்ளது. இவற்றின் கருங்கற்கல் சரிந்தும், குப்பைக்கழிவுகள் நிறைந்தும் உள்ளன. மின் விளக்குகள் இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. குளத்தைச் சுற்றி, சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. எனவே, தொன்மையான இக்கோவிலை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.