பதிவு செய்த நாள்
24
மே
2017
10:05
வேலூர்: பள்ளிகொண்டாவில், உத்தர ரங்கநாதர் கோவில் கொடி மரம் சாய்ந்து விழுந்ததால் பரிகார பூஜை நடந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய பகுதிகளில், நேற்று முன் தினம்
மாலை, 5:00 மணியில் இருந்து சூறை காற்றுடன் மழை பெய்தது.
இதில், 20 மரங்கள், 25 மின்சார கம்பங்கள் சாய்ந்தன. பலத்த காற்றால், இரவு, 7:30 மணிக்கு, பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதர் கோவிலில் உள்ள கொடிமரம் சாய்ந்து கீழே விழுந்தது. தகவல் அறிந்த வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையினர், நேற்று அந்த கோவிலுக்கு சென்று, விழுந்து கிடந்த கொடி மரத்தை பார்வையிட்டனர். பின் மீண்டும் கொடி மரத்தை சரி செய்து பிரதிஷ்டை செய்வது, கொடி மரம் விழுந்ததற்கு பரிகார பூஜை செய்வது என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, கொடி மரம் சாய்ந்து விழுந்ததற்கு கோவிலில் பரிகார பூஜை மற்றும் ஹோமம் நடந்தது.