பதிவு செய்த நாள்
25
மே
2017
11:05
ஸ்ரீவில்லிபுத்துார், புனிதமாக கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான குளங்கள், இன்று கழிவுகள் சேகரமாகும் குப்பைக்கிடங்குகளாக , கழிவுநீர் தேங்கும் குளங்களாக காணப்படுகிறது. இதன் மீது அறநிலையத்துறை தக்க நடவடிக்கை எடுத்து குளங்களை சீரமைத்து, நகரின் நீர்மட்டம் அதிகரிக்கசெய்யவேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்துார் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். மழைகாலங்களில் ஸ்ரீவில்லிபுத்துாரின் மேற்கு பகுதியிலிருந்து வரும் தண்ணீர், திருமுக்குளம், நாடகசாலைத்தெரு திருவேங்கடமுடையான் சன்னதி முன் இருக்கும் குளம், கீழரதவிதியில் தேர் நிற்கும் கீழ்புறம் இருக்கும் நீராவி குளம், சர்க்கரைகுளம், கிருஷ்ணன் கோயில் தெரு குளம் மற்றும் திருப்பாற்கடல் பகுதிகளை வந்தடையும் வகையில் இயற்கையாகவே அமைந்திருந்தது.
காலப்போக்கில் போதியளவு மழையில்லாததால் நீர்வரத்து பாதைகள் அடைபட்டு, நகருக்குள் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் துண்டிக்கபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் நகரின் நீர்மட்டம் ஒருபுறம் குறைந்தாலும், புனிதமாக கருதப்பட்ட குளங்கள் எல்லாம் இன்று சிதைந்தும், கழிவுகள் குவிந்தும், கழிவுநீர் தேங்கியும் சுகாதாரக்கேடுகளுடன் உள்ளது. திருமுக்குளம் குளத்தின் வடக்கு சுவர் இடிந்து பல மாதங்களாகியும், இன்று வரை குளம் சீரமைக்கப்படாதது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களை வேதனையடைச்செய்துள்ளது. மேலும், நான்கு கரைகளிலும் அசுத்தங்கள் பரவியும், படிகள் மற்றும் பக்கசுவர்கள் வலுவிலந்தும் காணப்படுகிறது. நாடகசாலை தெரு கோயில் குளம் ஆங்காங்கே கழிவுகள் காணப்பட்டநிலையில், சமீபத்தில் நடந்த விழாவை முன்னிட்டு ஓரளவிற்கு சரி செய்யபட்டுள்ளது. தேருக்கு கீழ்புறம் ஒருகுளம் இருப்பதே வெளிப்பார்வைக்கும். பொதுமக்களுக்கும் தெரியாத குளமாக உள்ளது. சர்க்கரைகுளம் அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டு மைதானமாகவும், ஒருபுறம் கழிவுகள் பரவியும் காணப்படுகிறது. இவ்வாறு இந்துசமய அறநிலையத்துறைக்குட்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயிலின் புனித குளங்கள் எல்லாம் இன்று கழிவுநீர் குளங்களாக இருப்பது பொதுமக்களை மிகவும் மனவேதனை அடையச் செய்துள்ளது.
புனிதம் காப்பாற்ற வேண்டும்: சரவணதுரைராஜா:கோயில் நகரமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாரில் இயற்கையாகவே அமைந்திருந்த குளங்கள் எல்லாம் இன்று சிதைந்து, கழிவு தேங்கி, கழிவுநீர் குளங்காளாக உள்ளது. இதனால் குளங்களின் புனிதம் கெட்டுப்போய் உள்ளது. தற்போது கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மனம் நொந்து கொள்கின்றனர். அறநிலையத்துறை தக்க நடவடிக்கை எடுத்து, குளங்களை சீரமைக்கவேண்டும்.
அக்கறை இல்லையே: சுப்பிரமணியன்:அதிகபட்சம் 2 கி.மீ., சுற்றளவில் ஸ்ரீவில்லிபுத்துார் நகரில் 6 குளங்கள் உள்ளது. இது இயற்கை நமக்கு கொடுத்த கொடை. இதை முறையாக பராமரித்திருந்தாலே நகருக்குள் நீர்வளம் இருக்கும். ஆனால், சம்பந்தபட்ட துறையினர் அக்கறையில்லாததால் அக்குளங்கள் எல்லாம் இன்று கழிவுகள் சேகரிக்கும் குப்பைக்கிடங்காக மாறி வருவது மனவேதனையை ஏற்படுத்துகிறது.
மனு கொடுத்தும் பலனில்லை: சோலையப்பன்: பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள குளங்களை பாதுகாக்க, சீரமைக்க கோரி எங்களது பசுமைக்குழுவினர் மூலம் உள்ளூரிலிருந்து சென்னை வரை அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. விடாமல் அலைந்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் மனச்சோர்வு அடைந்தோம். விருதுநகர் தெப்பம்போல மழைநீர் சேகரித்தால் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு நல்லது.
நீர்வளம் அதிகரிக்கும்: பிச்சைமுருகன்:ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள 6 குளங்களையும், அதன் சுற்றுப்பகுதியிலுள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைத்தால், அனைத்து குளங்களிலும் தண்ணீர் இருக்கும். நிலத்தடி நீர் அதிகரிக்கும். கோயில் குளங்களும் அசுத்தமாக இருக்காது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.