பதிவு செய்த நாள்
25
மே
2017
11:05
ஓசூர்: ஓசூர் அடுத்த கொத்தகொண்டப்பள்ளியில், யானையுடன் வீரன் சண்டையிடுவது போன்ற மிகவும் அரிதான நடுகல்லை, அறம் வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொத்தகொண்டப்பள்ளியில், அறம் வரலாற்று ஆய்வு குழுவினர் செய்த கள ஆய்வில், யானையுடன் வீரன் சண்டையிடுவது போன்ற நடுகல்லும், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த கங்கர்களின் கல்வெட்டுடன் கூடிய நடுகல் தொகுப்பும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து அறம் வரலாற்று ஆய்வு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: கொத்தகொண்டபள்ளியில் உள்ள தைல மர தோப்பிற்கு நடுவே, மூன்று நடுகற்கள் உள்ளன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்படாத, முதல் நடுகல்லில், ஒரு போர் வீரனின் சிற்பம் பெரிதாக செதுக்கப்பட்டு, அவன் முன், யானை மீது படை வீரன் அமர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நடுகற்களில் யானை போர் செய்யும் காட்சி மிகவும் அரிதாகவே காணப்படும். இந்த நடுகல் சிற்பத்தில், ஒரு போர் வீரன் வலது கையில் வாளை ஓங்கிய படியும், இடது கையில் மேலும் ஒரு ஆயுதத்தை தூக்கி பிடித்து தன்னை தாக்க வரும் யானையை தடுப்பது போலவும் காட்சி உள்ளது. வீரனின் இடது புறத்தில் மற்றொரு போர் வீரன், யானையின் மீது அமர்ந்தபடி, முன்நிற்கும் வீரனை தாக்குவது போல் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. வீரனின் வாள் மேல் நோக்கி இருப்பதால், யானை வீரனை மிதித்தோ அல்லது யானையுடன் சண்டையிடும் போதே வீரன் வீரமரணம் அடைந்தோ இருக்க வேண்டும். இது சுவர்க்க நடுகல் வகையை சேர்ந்ததாக இருக்கலாம். இதன் அருகில் இருக்கும் மற்றொரு நடுகல், கி.பி. ஒன்பது அல்லது, 10 ம் நூற்றாண்டின் துவக்க காலத்தை சேர்ந்த கங்கர்களின் நடுகல். இந்த நடுகல்லில், வீரனின் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் உள்ளன. இந்த நடுகல்லில் உள்ள எழுத்துக்கள் என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. இதன் அருகில் உள்ள மேலும், ஒரு நடுகல்லில், வீரன் கையில் வில் பிடித்து நிற்பதை காண முடிகிறது. கொத்தகொண்டபள்ளி ஊரின் மத்தியில் ஒரு கோட்டை நுழைவு வாயில் எஞ்சியிருக்கிறது. இதன் கீழ்பகுதியில் தெலுங்கு மொழியில் சிறிய கல்வெட்டும் உள்ளது. அதன் எதிர்புறத்தில் உள்ள சிவன்கோயில் முன் ஒரு சூல கல்லையும் காண முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.