பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சம்பலானது. காரைக்கால் திருநள்ளாரில், பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு, பக்தர்கள் பாதுகாப்புக்காக, கோவில் வளாகம், நளன் குளம் உள்ளிட்ட இடங்களில் 100க்கு மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த கேமரா பதிவுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அறையில் இருந்தவாறு, கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை 9.10 மணிக்கு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு அறையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து, கோவில் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்துள்ளனர். எனினும், தீ மளமளவென பரவியதால், சி.சி.டி.வி., கண்காணிப்பு அறை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அதனால் கோவில் வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. புகை மூட்டம் காரணமாக பக்தர்கள் சிரமப்பட்டனர். அதையடுத்து, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை, போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து சுரக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்பு வாகனம் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு அறை மற்றும் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மாவட்ட கலெக்டர் பார்த்திபன், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுரம் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்து குறித்து திருநள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.