பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில், திரவுபதி அம்மன் கோவில் வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், பத்தாம் ஆண்டு அக்னி வசந்த விழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 23 நாட்கள் இந்த விழா நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், பெருங்காட்டுர் ஜெயபாலனின் மகாபாரத சொற்பொழிவு தினமும் நடந்தது. அதேபோல், மகாபாரத நிகழ்ச்சியின், 21வது நாளில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து மதியம் தீ மிதி விழாவும், தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அதை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பண்ணந்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.