Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
3. மலர்வனம் புக்க காதை 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
முதல் பக்கம் » மணிமேகலை
4. பளிக்கறை புக்க காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
05:11

நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு

அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை புகுந்தனளாக, அவள்பால் பெருங்காதல் கொண்டிருந்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவளைத் தன் தேரிலேற்றிவரத் துணிந்து தேரோடு அவ் வுவவனத்தை அணுகியபொழுது மணிமேகலை அவன் வரவினைத் தேரின் ஒலியாலுணர்ந்து அக்கோமன் தன்பால் கன்றிய காமமுடையவனைதலைப் பண்டே கேள்வியுற்றிருந்தனளாகலின் பெரிதும் அஞ்சி அவ்  வுவவனத்திருந்த பளிக்கறையினுட் புகுந்து தாழக் கோலையிட்டுக் கொண்டதும் பின்னர் ஆங்கு நிகழ்ந்தனவும் கூறுகின்ற செய்யுள் என்றவாறு.

இதன்கண்-மணிமேகலைக்குச் சுதமதி அம்மலர்ப்பொழிலின் அழகைக் காட்ட அவள் கண்டு மகிழ்தலும், உதயகுமரன் மதங்கொண்ட யானையை அடக்கி மறவர் சூழத் தேரிலேறி மணிமேகலை சென்ற வீதயில் வருபவன், ஆங்கு எட்டிகுமரன் வாயிலாக மணிமேகலை மலர்வனம் புகப்போன்மை அறிந்து அங்ஙனமாயின் ஆங்குச் சென்று அவளை என் தேரிலேற்றி வருகுவென், என்று சூள்மொழிந்து தன் தேரை உவவனம் நோக்கிச் செலுத்தி அதனை அணுகுதலும் அதன் ஆரவாரத்தால் அங்ஙனம் வருபவன் அரசன் மகனே யாதல் வேண்டும் என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறுதலும், அவள் அஞ்சி நடுங்கி மணிமேகலையை அங்குள்ள பளிக்கறை மண்டபத்துட் புகுத்திப் பளிக்கறையின் அகத்தே தாழக்கோல் இட்டுக் கொண்டிருக்கச் செய்தபின் அதனாலே ஐந்து விற்கிடைத் தொலைவில் நிற்றலும், கழிபெருங்காம வேட்கையுடன் உதயகுமரன் தேரினின்றிழிந்து உவவனத்துள்ளே மணிமேகலையைத் தேடி வருபவன் அவளைக் காணாமல் சுதமதியை மட்டும் கண்டு அவள்பால் மணிமேகலையின் இயல்பினைத் தனது வேட்கை தோன்ற வினவுதலும், சுதமதி அச்சத்தோடு அவ்வரசிளங்குமரனுக்கு மக்கள் யாக்கையின் இழிதகைமையை எடுத்தோதுதலும், அதனைக் கேட்கும் பொழுதே மணிமேகலையைத் துருவித் திரியும் அவன்  கண்ணில் பளிக்கறை புக்க பாவையின் உருவம் பளிங்கினூடே வந்து புகுந்ததுவும் பிறவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்!
மாசு அறத் தெளிந்த மணி நீர் இலஞ்சி
பாசடைப் பரப்பில் பல் மலர் இடை நின்று
ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை
அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப  04-010

கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
கம்புள் சேவல் கனை குரல் முழவா
கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்!
இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
விரை மலர்த் தாமரை கரை நின்று ஓங்கிய
கோடு உடை தாழைக் கொழு மடல் அவிழ்ந்த
வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்!
மாதர் நின் கண் போது எனச் சேர்ந்து
தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின்  04-020

அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
எறிந்து அது பெறா அது இரை இழந்து வருந்தி
மறிந்து நீங்கும் மணிச் சிரல் காண்! எனப்
பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து  04-030

கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்கு கால் எடுத்த வங்கம் போல
காழோர் கையற மேலோர் இன்றி
பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
கோவியன் வீதியும் கொடித் தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
ஒரு பால் படாஅது ஒரு வழித் தங்காது  04-040

பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால் வரை நிலனொடு படர்ந்தெனக்
காலவேகம் களி மயக்குற்றென
விடு பரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி
கடுங்கண் யானையின் கடாத் திறம் அடக்கி
அணித் தேர்த் தானையொடு அரசு இளங் குமரன்
மணித் தேர்க் கொடுஞ்சி கையான் பற்றி
கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன்  04-050

நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான் கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்!
யாது நீ உற்ற இடுக்கண்! என்றலும்  04-060

ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல்
தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலையொடு
கோவலன் உற்ற கொடுந் துயர் தோன்ற
நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம் பகை நரம்பின் என் கைச் செலுத்தியது  04-070

இது யான் உற்ற இடும்பை என்றலும்
மது மலர்த் தாரோன் மனம் மகிழ்வு எய்தி
ஆங்கு அவள் தன்னை என் அணித் தேர் ஏற்றி
ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து ஆங்கு
ஓடு மழை கிழியும் மதியம் போல
மாட வீதியில் மணித் தேர் கடைஇ
கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அத்
தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
என்மேல் வைத்த உள்ளத்தான் என  04-080

வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை!
ஈங்கு என் செவிமுதல் இசைத்தது என் செய்கு? என
அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
சுதமதி கேட்டுத் துளக்குறு மயில் போல்
பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று
ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
நீங்காது நின்ற நேர் இழை தன்னை   04-090

கல்லென் தானையொடு கடுந் தேர் நிறுத்தி
பல் மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்
பூ மரச் சோலையும் புடையும் பொங்கரும்
தாமரைச் செங் கண் பரப்பினன் வரூஉம்
அரசு இளங் குமரன் ஆரும் இல் ஒரு சிறை
ஒரு தனி நின்றாய்! உன் திறம் அறிந்தேன்
வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ?
விளையா மழலை விளைந்து மெல் இயல்
முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல்?  04-100

செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்?
மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
தானே தமியள் இங்கு எய்தியது உரை? எனப்
பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி
மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ?  04-110

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
வினை விளங்கு தடக் கை விறலோய்! கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
அவலம் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இது என உணர்ந்து  04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்
என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்  04-125

உரை

(1-முதலாக 25-இறுதியாக, உவவனத்தினுள் புக்க மணிமேகலைக்கு அதன் எழிலையும் அங்குறையும் பறவை முதலியவற்றையும் சுதமதி காட்டிக் கூறுவதாய் வரும் ஒரு தொடர்)

மயிலாடரங்கு

1-9: பரிதி.......காண்பன காண்

(இதன் பொருள்) பரிதி அம் செல்வன் விரிகதிர் தானைக்கு இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-ஞாயிற்றுக் கடவுளாகிய உலக முழுதாள்கின்ற அழகிய அரசனுடைய திசையெலாம் விரிந்த கதிர்களாகிய படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்க்கு அஞ்சிப்புகுந்த இருளானது அப் படைமறவர்களாலே நாற்றிசையும் சூழ்ந்து முற்றுகையிடப்பட்டமையால் உள் புகுந்தோர் இது பகலோ இரவோ என்று மருள்தற்குச் காரணமான
அம் மலர்ப் பொழிலினூடே; தும்பி குழல் இசை கொளுத்திக் காட்ட-தும்பிகள் வேய்ங்குழலின் இசையைக் கூட்டிக் காட்டா நிற்பவும்; வண்டு இனம் மழலைநல் யாழ் செய்ய-வண்டுக் கூட்டங்கள் கேள்விக்கினிய அழகிய யாழிசையை உண்டாக்கவும்; வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் ஒளி ஒரு பொழுதும் நுழைதல் அறிந்திலாததும் குயில்களும் நுழைத்தே செல்லுதற் கியன்ற செறிவுடையதுமாகிய அப் பொழிலிடத்தே; மயில் ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்-மணிமேகலாய்! அதோ மயிலாகிய நாடகக் கணிகை கூத்தாடா நின்ற கூத்தாட்டரங்கின் கண் மந்தியாகிய அவையோர் இருந்து காண்பனவற்றைக் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) பரிதி-ஞாயிறு. செல்வன்-அரசன். அழியாத ஒளிச் செல்வன் என்பார், அஞ்செல்வன் என்றார். அவன் பகையாகிய இருளை நாற்றிசையும் பரந்து சென்று அழித்தலின் விரிகதிர் தானையாயிற்று. பகையாகிய இருள் புக்குக் கரந்திருத்தலான் அத் தானையால் வளைப் புண்டிருக்கும் அரணாகிய பொழில் என்றவாறு.

தும்பி-வண்டு. இசை கொளுத்துதல்-இசையைப் பொருத்துதல். மழலை-இன்பம். வெயிலாகிய பகை நுழையவியலாது. குயில் இருட்கின மாதலின் அவைமட்டும் புகும் பொதும்பர் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. கணிகையாகிய மயில் எனவும் அவையோராகிய மந்தி எனவும் கூறிக்கொள்க.

அரசவன்னம் கொலுவிருத்தல்

7-13: மாசற.........காணாய்

(இதன் பொருள்) மாசு அறத் தெளித்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பின்-அழுக்கற்றமையாலே நன்கு தெளிந்துள்ள படிகமணி போன்று தூயதாகிய பொய்கையாகிய தன் அரண்மனையகத்தே பசிய இலையாகிய கம்பளம் விரிக்கப்பட்ட திருவோலக்க மண்டபத்தில்; பல்மலர் இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த்தாமரை ஆங்கு-பல்வேறு மலர்க் கூட்டங்களாகிய இருக்கைகளுள் வைத்துத் தனக்கே சிறந்துரிமையுடைய தொரு பேரழகோடு உயர்ந்து மலர்ந்துள்ள நறுமணங் கமழுகின்ற தாமரையாகிய அரசு கட்டிலின் மேலே; இனி அரச அன்னம் இருப்ப-காட்சிக்கினிதாக அன்னமாகிய அரசன் கொலுவீற்றிருப்ப; கரை நின்று ஆலும் ஒரு மயிலுக்குக் கம்புட் சேவல் கனைகுரன் முழவு ஆக-அவ்விலஞ்சியின் கரையாகிய ஆடலரங்கினின்று கூத்தாடுகின்ற ஒப்பற்ற மயிலாகிய விறலியினது ஆடலுக்கியையச் சம்பங்கோழிச் சேவலாகிய முழவோனுடைய மிக்கவொலி மத்தள முழக்கம் ஆக; கொம்பர் இருங்குயில் விளைப்பது காணாய் பூங்கொம்பிலுள்ள கரிய குயிலாகிய பாணன் பாடுவதனையும் காண்பாயாக என்றாள் என்க.

(விளக்கம்) மணி-படிகமணி. பாசடை-பசியஇலை. இது பச்சைக் கம்பளமென்க. இருக்கும் இருக்கைக்குப் பல்வேறு இடைநின்று ஒரு தனி ஓங்கிய விரைமலர்த் தாமரை ஆங்கு-பல்வேறு பறவைகள் இருக்கும் நீர்பூக்கள் உவமை; தனிநின்றோங்கிய விரைமலர்த் தாமரையாகிய அரசு கட்டில் என்க. கரை-ஆடலரங்கு எனவும், மயில் விறலி எனவும் கொள்க. கம்புட்சேவல்-சம்பங்கோழியிற்
சேவல்: இதனை முழவோன் எனவும், குயிலை பாணனாகவும் கூறிக் கொள்க. என்னை அன்ன அரசன் கொலுவீற்றிருத்தலால், இங்ஙனம் இனிதின் இயம்பினர். இது குறிப்புவமம் என்னும் அணி. விளிப்பது-பாடுவது. விளித்த இன்னமிர்துறழ்கீதம் (சீவக-1941)என்புழியும் அஃதப்பொருட்டாதலறிக.

வேறு பல காட்சிகள்
14-25: வயங்குதேர்...........காட்ட

(இதன் பொருள்) தேர் இயங்கு வீதி எழுதுகள் சேர்ந்து வணங்கு ஒளி மழுங்கி நின் மாதர் முகம் போல்-யாம் வந்த தேரோடும் வீதியிலே கம்பலை மாக்கள் சூழ்தலாலே எழுந்த புழுதி படிந்தமையாலே விளங்கும் ஒளி மழுங்கியிருக்கின்ற நின்னுடைய அழகிய முகத்தைப் போன்று; கரை நின்று ஓங்கிய கோடு உடைத்தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால் வெள் சுண்ணம் ஆடிய இவ்விலஞ்சியன் கரையிலே நின்றுயர்ந்துள்ள கொம்பின் மலர்ந்துள்ள தாழம்பூவினது கொழுவிய அகமடலில் உதிர்ந்த மிக்க வெள்ளிய துகள் மூடியதனால் தன்னொளி மழுங்கிய; விரை மலர்த்தாமரை இது காண்-மணமுடைய மலராகிய தாமரை மலரிதனையும் காண்பாயாக; மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடிசெங்கையின் அலர்ந்த தாமரை-அழகிய நின்னுடைய கண்ணை மலர் என நினைத்து வந்து வீழ்ந்து தாதுண்ண முயலுகின்ற வண்டுகளின் மேலோச்சிக் கடிகின்ற நின் சிவந்த கையைப் போன்று மலர்ந்துள்ள தாமரை மலரின் மேல்; செங்கயல் பாய்ந்து பிறழ்வன-சிவந்த கயல் மீன்கள் பாய்ந்து பிறழ்கின்றவற்றை; அம் சிறைவிரிய ஆங்குக் கண்டு எறிந்து அது பெறா அது-வானத்தே தனது அழகிய சிறகுகள் விரிய அசையாமல் பறந்து அப்பொழுது கண்டு சிறகொடுக்கி விரைந்து எறிந்தும் அம் மீனைப் பற்றமாட்டாமல்; இரை இழந்து-தனக்கியன்ற இரையினை இழந்து; வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண் என-உளம் வருந்தி மீண்டு போகும் அழகிய அச்சிரற் பறவையின் செயலையும் அழகையும் காண்பாயாக என்று; பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட-அப் பூம்பொழிலின் அழகையும் பொய்கையின் அழகையும் மணிமேகலைக்குச் சுதமதி காட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண்-மணிமேகலைக்குக் கூறுகின்ற சுதமதியின் கூற்றை ஞாபகவேதுவாக வைத்து நம்மனோர்க்கு நினைவூட்டும் செய்தியும் உண்டு. அச் செய்தியை ஈண்டுக் கருப்பொருட் புறத்தே தோற்றுவிக்கும் இப் புலவர் பெருமான் வித்தகம் பெரிதும் வியக்கத்தக்கதாம்.

அது வருமாறு: தாமரை மலரில் பிறழ்ந்த செங்கயல் கண்டு வானத்தேசிறைவிரியக்காத்துநின்ற மணிச்சிரல் தனக்கு எளிதாகக்கிட்டு மோரிரை என்று கருதி விரைந்து அதன் மேல் வீழ்ந்து பற்றியும், அவ் விரை பெறாமல் மறிந்து விண்ணில் மீண்டது என்னுமிதன் புறத்தே,மலர்வனம் புக்கமையால் மணிமேகலை தனக்கு எளிதாகக் கிடைத்து விடுவாள் என்று கருதி அவள்மேற் சென்ற அரசிளங்குமரன் தன்கருத்து நிறைவேறாமல் வாளாது மறிந்து (இறந்து) விண்ணேறினன் என்னும் பின்னிகழ்ச்சியை இப்புலவர் பெருமான் நம்மனோரை நினைக்குமாறு செய்கின்றார். இதுஞாபக வேது எனப்படும். புலவர்நினைந்த தொன்றனைக் கதையோடு தொடர்பு படுத்தாமலே பயில்வோருளத்தே தோற்று விக்கக் கருதி அதற்கு ஏதுமாத்திரையே புறத்தே தோற்றுவித்தலாம். இஞ்ஞாபகம் காரணமாகச் சிரல் இரைபெறாது இழந்து வருந்தி மறிந்து நீங்கியது என்று விதந்தோதியிருத்தலறிக. மறித்து நீங்கும் என்ற சொல் பொய்தது உதயகுமரன் திறத்திலே இறந்தொழிந்தான் என்னும் பொருட்கியைதற் பொருட்டேயாம் என்பது நுண்ணுணர்வற் கண்டு கொள்க.

நகரத்தின்கண் காலவேகம் என்னும் யானை மதமயக்குற்றுச் செய்யும் செயல்கள்

26-34: மணிமே........போல

(இதன் பொருள்) மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி-இவ்வாறு மணிமேகலை அந்த மலர்ப் பொழிலின் இயற்கையழகினைக் கண்டு மகிழாநிற்கும் பொழுது; மதிமருள் வெள்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன்-திங்கள் மண்டிலம் போன்ற வெண் கொற்றக் குடையையுடைய சோழ மன்னனுடைய மகன் உதயகுமரன் என்பான்(செய்தன சொல்வாம்); உருகெழு மூதூர்-பகைவர்க்கு அச்சந்தருகின்ற அப் பூம்புகார் நகரத்திலே; (44) கால வேகம் களிமயங்கு உற்றென-காலவேகம் என்னும் களிற்றியானையானது காமத்தாற் களித்தற்குக் காரணமான மதவெறிப்பட்டபடியாலே; நீயான் நடுங்க நடுவுநின்ற ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து-மாலுமியானவன் செயலறவினாலே திகைத்து நடுங்கும்படியும் மரக்கலத்தின் நடுவிடத்தே நின்றுயர்ந்த பாய்மரம் முறிந்து போம்படியும் செறியக் கட்டின கட்டவிழ்ந்து கயிறுகள் புரியற்றுப் போகவும்; இதை வயிறு பாழ் பட்டாங்குச் சிதைந்து ஆர்ப்ப-பாயின் நடுவிடம் கிழிந்து பாழ்வெளியாய் விடவும் பாய் சிதைந் தொழியவும் அகத்துள்ள மாக்கள் எல்லாம் அழுது ஆரவாரம் செய்யவும்; திரை பொரு முந்நீர் இயங்குதிசை அறியாது-அலைகள் மோதா நின்ற கடலிடத்தே தான் செல்ல வேண்டிய திசையையும் அறியமாட்டாமல்; யாங்கணும் ஓடி-தள்ளிய திசைகளிலெல்லாம் ஓடியலைந்து; மயங்கு கால் எடுத்த-சுழற்காற்றாலியக்கப்படுகின்ற; வங்கம் போல-மரக்கலத்தைப் போன்று, என்க.

(விளக்கம்) மதிமருள் என்னும் அடைமொழி வெண்குடைக்குவமை யாதலோடன்றி  மதிமருள்.....சிறுவன் என்பதனோடும் இயைவிக்கலா மாதலின் ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துள்ளமையாலே பிக்குணியாகிய மணிமேகலையின் பால் கன்றிய காமமுடையனாய் அறிவுமயங்கிய அரசிளங்குமரன் எனவும் பொருள் கோடற்கும் இயைந்து நிற்றலால் இஃது இரட்டுறமொழிதல் என்னும் உத்தியின் பாற்படுதலும் உணர்க. எழுவாய் சேய்மையிற் கிடந்தமையின் ஈண்டுக்கொண்டு கூட்டப்பட்டது. காலவேகம் என்பது பட்டத்தியானையின் பெயர். களிமயக்கம்-காமவெறியாலுண்டான அறிவு மயக்கம். நீயான்-மாலுமி. கூம்பு-பாய்மரம். இதை வயிறுபாழ்பட என இயைக்க. இதை-பாய். நடுவிடம் கிழிந்து வெளியாகிவிட என்றவாறு. நீயான்-யானைப்பாகனுக்கும்,மரக்கலம்-யானைக்கும்,மயங்கு கால்-களிமயக்கத்திற்கும் உவமைகளாக உணர்க. மயங்குகால்-சுழற்காற்று மூதூர்க்குக் கடலுவமை.

இதுவுமது

35-44: காழோர்.........படர்ந்தென

(இதன் பொருள்) காழோர் கை அற மேலோர் இன்றி-குத்துக் கோற்காரர் தம்மாலாந்துணையும் குத்தியும் மடங்காமையாலே செயலற்றொழியத் தன் மேலிருந்து செலுத்தும் பாகர் யாருமில்லாமல் செய்து; பாகின் பிளவையின் பணை முகந்துடைத்து-அப் பாகர் தோட்டியாற் குத்திப் பிளந்த புண்ணின்பரிய வாயினின் றொழுகும் குருதியைத் தன் கையாற் றுடைத்துக் கொண்டு; கோ இயல் வீதியும் கொடித் தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து-அரசற்கியன்ற வீதியிடத்தும் கொடி உயர்த்திய தேரோடும் வீதியிடத்தும் அங்காடித் தெருவிடத்தும் புகுந்து மாபெருங் கலக்கத்தை மக்கட்குண்டாக்கி; ஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர்-அவ்வாறே பட்டினப்பாக்கமும் மருவூர்ப் பாக்கமும் என்னும் இருவகைப் பெயரையுடைய அச்சம் பொருந்திய அம் மூதூரின்கண், யாங்கணும்; ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது-ஒரு பக்கத்திலே படாமலும் ஓரிடத்திலே நில்லாமலும்; பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுலமாக்களும் அலவுற்று விளிப்ப-பாகுத் தொழிலோரும் பறையறை வோரும் பந்தர் போல் நிழலிட்டுத் தன்னைச் சூழ்ந்து பறக்கும் பருந்துக் கூட்டமும் ஆற்றா மாந்தரும் மனஞ்சுழன்று துன்பக் குரல் எழுப்பும்படி; நீலமால்வரை நிலத்தோடு படர்ந்தென நீல நிறமுடைய மலையொன்று நிலத்திலே இயங்குகினாற் போன்று இயங்காநிற்ப, என்க.

(விளக்கம்) காழ்-குத்துக்கோல். மேலோர்-பிடரிலிருந்து செலுத்தும் பாகர். பாகின் பிளவை-பாகர் தோட்டியாற் குத்திப்பிளந்த புண். முகம்-புண்ணின் வாய். காழோரும் பாகரும் தன் முகத்திற் புண்களைக் கையினாற்றுடைத்து எனினுமாம். பீடிகைத்தெரு-அங்காடித்தெரு. இருபாற்பெயரிய என்றது ஈண்டுப் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இருபகுதியாகிய பெயரையுடைய என்பதே கருத்து. என்னை ஒருபாற் படா அது என்பதனால். இனி காவிரிப்பூம்பட்டினம் சம்பாபதி என்னும் இருபாற் பெயரிய மூதூர் என்றல் ஈண்டுச் சிறப்பில்லை.(கால.....படர்ந்தென என்னும் அடி கூட்டிப் பொருள் கூறப்பட்டது.)

உதயகுமரன் மறச்செயல்

45-50:விபேரி...........வருவோன்

(இதன் பொருள்) அரசு இளங்குமரன் விடுபசிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-யானையால் நிகழுகின்ற இன்னலைப் பணிமாக்கள் அறிவித்தவுடனே இளவரசனாகிய உதயகுமரன் தனக்கெனவே விடப்பட்டிருக்கின்ற விரைந்த செலவினையுடையதொரு குதிரையில் ஏறி விரைந்து அக்களிற்றியானையின் பால் சென்றடைந்து; கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி-சினமிக்க அக் களிற்றியானையின் மதவெறியை அடக்கித் தளையிடுவித்து; அணிந்தேர்த் தானையொடு-அழகிய தேர்ப்படையோடு; தானும் மணித்தேர் கொடுஞ்சி பற்றி-தானும் ஒரு மணிகட்டி அணி செய்யப் பெற்ற தேரில் ஏறி அத் தேரிலுள்ள இருக்கையில் அமராமல் தன்னைக் காண விரும்பும் மக்களுக்கு நன்கு காட்சி நல்குதற் பொருட்டு அவ் விருக்கையைக் கையாற் பற்றி நின்றவாறே, கார் அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன்வருவோன்-தன்னைக் காண்பவர்க் கெல்லாம் தான் கார் காலத்தே மலருங் கடப்பமாலை யணியும் முருகவேள் அல்லன் சோழமன்னன் மகனே என்னும் உண்மையைத் தான் அணிந்திருக்கின்ற ஆத்திமாலையினாலே அறிவித்துத் தேரூர்ந்து வருகின்றவன்; என்க.

(விளக்கம்) விடுகுதிரை பரிக்குதிரை எனத்தனித்தனிகூட்டுக. தனக்காக விடப்பட்ட விரைந்த செலவையுடைய குதிரை என்றவாறு. இனி, குதிரைப்படையொடு கூட்டாமல் ஏறியூர்தற் பொருட்டு விடப்பட்ட குதிரையுமாம். கொடுஞ்சி தாமரைவடிவிற்றாகச் செய்து தேர்த்தட்டில் இடப்பட்ட இருக்கை. காலவேகத்தை அடக்கிய வெற்றிபற்றித் தன்னைக் காண்டற்கு அவாவி இருமருங்கும் கூடிநிற்கும் மாந்தர் நன்கு கண்டு களித்தற் பொருட்டு இருக்கையிலமராமல் அதனைப் பற்றிநின்றவாறே வருபவன் என்பது கருத்து. இக்காலத்தும் ஊர்வலம்வருந் தலைவர் இவ்வாறு ஊர்தியில் இராமல் எழுந்து நின்று வருதலைக் காணலாம். உதயகுமரனைக் காண்போர் இவன் முருகனோ உதய குமரனோ என்று ஐயுறுதல் கூடும். ஆதலின் அங்ஙனம் ஐயுறாமைப் பொருட்டு உதயகுமரன் ஆத்திசூடி வருகின்றான் என்னும் இது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

கடம்பன்-முருகன். ஆரங்கண்ணி-ஆத்திமாலை. இது சோழ மன்னர்க்குரிய அடையாளப் பூமாலை.

இனி, கொடுஞ்சி என்பதற்கு உ.வே.சா ஐயரவர்கள், தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் என எடுத்துக்காட்டி, மேலும் இது தாமரைமொட்டு வடிவமுள்ளது என்றும் விளக்கினர். இவ்விளக்கம் விளங்காவிளக்கமாம். என்னை! கொடுஞ்சி என்பது தேரிலிடப்படும் இருக்கையே அன்றிவேறன்று. இவ்வுண்மை அவ்விளக்கங்களால் விளக்கமாகாததோடு அது தாமரை மொட்டு வடிவமுள்ளது என்பது இருக்கைக்குப் பொருந்தாமையும் உணர்க. இனி அஃது இருக்கையே என்பது சிலப்பதிகாரத்தில் காணப்பட்டது. அதனை-

கடும்படை மாக்களைச் கொன்று களங்குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட  (26:12-14)

என்புழி கொடுஞ்சி என்பது களிற்றெருத்தமும் குதிரையின் வெரிநும் (முதுகு) போன்று மறவர் இருக்குமிடம் என்பது நன்கு விளக்கமாதல் நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

உதயகுமரன் எட்டி குமரனை வினாதல்

56-60: நாடக......என்றலும்

(இதன் பொருள்) நாடக மடந்தையர் நலம் கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்-நாடகக் கணிகையர் வாழ்கின்ற அழகு பொருந்திய வீதியில் வரும்பொழுது அவ்வீதியிலுள்ள தொரு பொன்னாலியன்ற கலைத்தொழிற் சிறப்பமைந்த ஒரு மாளிகையின் மேல்மாடத்தின்கண், பெளித்த கால் போகுபெருவழிச் சாளரத்தின் அருகிலே; வீதி மரங்கு இயன்ற பூ அணைப்பள்ளி-தெருப்பக்கமாக இடப்பட்டதொரு மலர்ப்பள்ளிக் கட்டிலின் மேல்; தகரக் குழலாள் தன்னொடு மயங்கி-மயிர்ச் சந்தனம் நீவிய கூந்தலையுடைய தன் காமக்கிழத்தியோடே மனம் மயங்கி; மகரயாழின் வான் கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைத்த பாவையின் இருந்தோன்-மகர யாழினது சிறந்த கோட்டினை ஒரு கையால் பற்றிய வண்ணம் எழுதுகோளால் எழுதபட்டதோர் ஓவியமே போன்று சிறிதும் இயக்கமின்றி அமர்ந்திருந்த; எட்டிகுமரன் தன்னை-எட்டிப்பட்டம் பெற்ற கொழுங்குடிச் செல்வனாகிய வணிக விளைஞனை உதயகுமரன் கண்டு வினவுபவன்; மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்-நங்கையொருத்தியொடு பெரிதும் மயங்கி இருக்கின்றாய்; நீ உற்ற இடுக்கண் யாது என்றலும்-நண்பனே நீ இவ்வாறு மயங்கியிருத்தற்கு இப்பொழுது நீ எய்திய துன்பம் என்னையோ என்று வினவுதலும்,என்க.

(விளக்கம்) ஆடகம்-ஒருவகைப் பொன். பொளித்த-குடைந்த. கால்-காற்று. பெரிய சாளரம் என்பார் பெருவழி என்றார். அஃது அம்மாளிகையின் மேன்மாடத்து வீதிப்பக்கமாக இருந்தது என்பதும், அச் சாளரத்தின் அருகே பள்ளிக்கட்டில் இடப்பட்டிருந்ததும் என்பதும் அதன்மேல் எட்டிகுமரன் தன்னை மறந்திருந்தான் என்பதும் அவன் மருங்கே அவன் காமக்கிழத்தியும் வாளாதிருந்தாள் என்பதும் அச் சாளரத்தின் வழியே உதயகுமரன் ஒவியம் போன்றிருக்கும் அவனைக் கண்டு வினவிளன் என்பதும் அவன்றானும் செல்வக் குடியிற் பிறந்த பெருநிதிக் கிழவன் என்பதும் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சொற் சுருங்கத் திறம்பட விளக்கியிருத்தல் உணர்க.

எட்டி-வணிகருட் சிறந்தோருக்கு அரசனால் வழங்கப்படும் ஒரு பட்டம். குமரன் என்றது உதயகுமரனுக்கு நண்பனாகும் அவனது இளமை கூறியவாறு.

மகிழ்ந்திருக்க வேண்டிய செவ்வியில் மயங்கியிருக்கின்றனை என்பாள் மாதர் தன்னொடும் மயங்கினை இருந்தோய் என்றான். இங்ஙனம் இவன் மயங்குதற்குக் காரணம் மனத்துன்பமே ஆதல் வேண்டும் என்னும் ஊக்கத்தால் இவ்வாறு வினாவினன். இவ் வூகத்திற்கு இவன் மாதர் அத்துன்பத்திற்குக் கழுவாய் ஏதும் செய்யாமல் வாளாவிருந்தமையே ஏதுவாயிற்று என்க.

எட்டிகுமரன் காரணம் இயம்புதல்

61-71: ஆங்கது.......என்றலும்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்டு-அவ்வாறு வினவிய உதயகுமரன் குரல் கேட்டவுடனே மயக்கத்தினின்று விழிப் படைந்தவனாய் எட்டி குமரன் வீங்கு இளமுலையொடு தான் பாங்கிற் சென்று தொழுது ஏத்தி-துணுக்குற் றெழுந்த அவ் வெட்டி குமரன் பருத்த கொங்கைகளையுடைய தன் காமக் கிழத்தியோடே விரைந்து உதயகுமரன் தேர் மருங்கே எய்திக் கை கூப்பித் தொழுது கொற்றவ நீடுழி வாழ்க! நின் வரவறியாது கெட்டேன் என்று தன் பிழைக்கு வருந்திப் பின்னும் புகழ்ந்தேத்தி; மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் துளிக்கும் மலர் மாலை அணிந்த அக் கோவிளங்குமரனுக்கு; எய்தியது உரைப்போன்-விடையாக அங்கு நிகழ்ந்ததனைக் கூறுபவன், வகை வரிச் செப்பினுள் வைகிய மலர் போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமேகலையொடு-ஒழுங்காக வரிந்து கட்டப்பட்ட செப்புக் கலத்தினூடே வைக்கப்பட்டிருந்த மலர் போன்று தன் பருவத்திற்குத் தகுதியான தனது பேரழகு வாடி இத் தெருவிலே நடந்து சிறிது முன்பு சென்றவளாகிய மாதவி ஈன்ற மணிமேகலையைக் கண்டதனாலே; கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி-அக் காட்சி வாயிலாய் அவள் தந்தையாகிய கோவலன் எய்திய கொடிய துயரம் என்னெஞ்சிலே தோன்றவே அது கலங்கிற்றாக அது காரணமாக என்நெஞ்சமானது தன்பால் நிலை பெற்றிருந்த பண்ணிற்கியன்ற நரம்பினை இயக்கும் தன் பண்பிற்கு மாறாக; வெம்பகை நரம்பில் என்கைச் செலுத்தியது; அதற்குப் பகை நரம்பிலே என் கையைச் செலுத்திவிட்டது; இது யான் உற்ற இடும்பை என்றலும்-இதுவே யான் பெருமானுடைய வரவும் அறியாதவண்ணம் பெரிதும் மயங்கி இருந்தமைக்கு எய்திய காரணமாம்; பெருமான் நீடு வாழ்க என்றறிவுறுத்தலும் என்க.

(விளக்கம்) ஆங்கது கேட்டு என்றது அங்குநிகழும் ஆரவாரமும் அறியமாட்டாதிருந்த அவன் மயக்கமிகுதி தோன்ற நின்றது. வீங்கிள முலை-காமக்கிழத்தி. எய்தியது-நிகழ்ந்த காரணம். பௌத்தப்பள்ளியின் கட்டுக்காவன் மிகுதிபற்றி அதனுள் அடங்கி இருந்த மணிமேகலையை வகைவரிச் செப்பினுள் வைகிய மலர் என்றான். மணிமேகலை யினால் தோன்றிய கொடுந்துயர் என்றது, கோவலன் கொலைப்பட்டதனை. துயர் தோன்ற நெஞ்சு தான் மேற்கொண்டிருந்த இசைத்தொழின் நீர்மையில் நீங்கித் தன்னை அறியாது பகைநரம்பில் கையைச் செலுத்திப் பண்ணையும் கொடுத்தது இவ்வாற்றால் மயக்கமுற்றேன்: பகைநரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவதும் மூன்றாவதுமாகும். நின்ற நரம்பிற்கு ஆறும் மூன்றும் சென்று பெற நிற்பது கூடமாகும் என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள்(சிலப்-8;33-4)

உதயகுமரன் அதுகேட்டு மகிழ்ந்து மணிமேகலையைக் கைப்பற்றத் துணிதல்

72-78: மதுமலர்............இசைத்தலும்

(இதன் பொருள்) மதுமலர்த் தாரோன் மனம் மகிழ்வெய்தி-தேன் பொதுளிய மலர்மாலையணிந்த அவ்வரசிளங் குமரன்றானும் மணிமேகலை மலர்வனத்திற்குச் சென்ற செய்தியை எட்டிகுமரன் வாயிலாய்க் கேட்டுப் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைந்து; ஆங்கு அவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி வருவேன் என்று அவற்கு உரைத்து; நண்பனே நன்று சொன்னாய் அம்மலர் வனத்தே யானும் சென்று அம் மணிமேகலையை என் அழகிய தேரில் ஏற்றி கொண்டு மீண்டும் இங்கு வருவேன் காண் என்று அவ் வணிகனுக்கு அறிவித்துப் பின்னர்; ஆங்கு ஓடு மழை கிழியும் மதியம் போல மாடவீதியின் மணித்தேர் கடை இவானத்தே இயங்குகின்ற ஒரு முகிலைக் கிழித்தியங்கும் திங்கள் மண்டிலம் போன்று மாட மாளிகைகளையுடைய வீதியிலே தன் தலையிலே அணிந்து கொள்ளும் உவவனம் என்னும் அப் பூம்பொழிலின் வாயிலை அணுகிய பொழுது; அத் தேர் ஒலி மாதர் செவி முதல் இசைத்தலும்-அத் தேர் செய்யும் ஆரவாரம் அப் பொழிலகத்திருந்த மணிமேகலையின் செவியிடத்தே சென்று ஒலித்தலாலே என்க.

(விளக்கம்) உதய குமரன் மணிமேகலையின்பால் இயற்கையாகவே காதலுடையவனா யிருந்தும் சித்திராபதியால் தூண்டப்பட்டிருந்தும் அவள் தவப்பள்ளியிடத்தாளா யிருத்தல் அறிந்து அவளை நாடி உயிர் குடித்தோன்றலாகிய தான் அங்குப் போதல் பழிதருஞ் செயலாம் என்றுணர்ந்து அதுகாறும் மனமடக்கியிருந்தான் ஆதலின் அவள் இப் பொழுது பூம்பொழிலிலிருக்கின்றமை எட்டிகுமரனால் அறிந்து அங்குச் சென்று அவளைப் பற்றிவருதல் கூடும் என்று மனமகிழ் வெய்தினன் என்றவாறு. எட்டிக்குமரன் உதயகுமரனுக்கு நண்பனாதலானும் அச் செயல் அவனுக்கு உடன்பாடாம் என்பதனானும் அவளைத் தேரேற்றி ஈங்கு வருவேன் என்று அவனுக்குக் கூறினன் என்க.

உதயகுமரன் தன்னைக் காணவந்து குழுமிய நகரமாந்தர் குழுவினூடே தேரூர்ந்து வந்தவன் இச் செய்தி கேட்டவுடன் தன்தேரோடு ஒத்தியங்கும் அக்கூட்டம் விலகுமாறு தன்தேரைக் கடவித் தனியே செல்கின்றன் ஆகலின் அதற்கு ஓடுமழை கிழியும் மதியம் போலத் தேர் கடைஇ உவமை எடுத்தோதினர். மதியம் தேர்க்கும் முகில் மக்கட் கூட்டத்திற்கும் உவமை. இவ்வுவமையின் அழகுணராது இதற்குத் தத்தம் வாய்தந்தன கூறுவாருமுளர்: வானத்தே முகிலாற் சூழப்பட்டதிங்கள் அம் முகில்களியங்குதல் தோன்றாமல் தான் இயங்குதல் போன்று காட்சிதரும். முகில்கள் திங்களைவிட்டு நீங்கிய பொழுதில் திங்கள் முகில்களைக் கிழித்துக்கொண்டு தனித்து விரைந்தியங்குமாறு போலே காட்சி தரும். இது மயக்கக் காட்சியே ஆயினும் ஆதனையே உவமையாக எடுத்தனர் என்று நுண்ணிதின் அறிந்திடுக. மக்கட்குழு மேனின்று நோக்குவர்க்குக்  கூந்தலும் குஞ்சியும் செறித்து முகில் போறலும் உணர்க.

தேரொலிகேட்ட மணிமேகலை நிலையும் சுதமதி அவளைப் பளிக்கறை புகுத்தலும்

79-88: சித்திரா.............இரீஇ

(இதன் பொருள்) ஆயிழை சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான் என-அன்னாய் ஈதொன்று கேள் சித்திராபதியோடு தொடர்புற்று உதயகுமரன் என்னும் வேந்தன் மகன் என்பால் காமுற்ற நெஞ்சையுடையனாக இருக்கின்றான் என்று; வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளிந்த மாற்றம் கேட்டேன்-வயந்தமாலை என் அன்னையாகிய மாதவிக்கு ஒரு நாள் அறிவித்த செய்தியை யான் என் செவியாலே கேட்டிருக்கின்றேன்; ஆதலின் ஈங்கு என் செவிமுதல் இசைத்தது ஆங்கு அவன் தேர் ஒலி போலும்-ஆகையால் இப்பொழுது என் செவியால் கேட்ட ஒலி அம் மன்னன் மகன் என் பொருட்டு ஊர்ந்து வருகின்ற தேரின் ஒலியே போலும்; என் செய்கு-அங்ஙனமாயின்யான் என் செய்வேன் என அமுது உறு தீங்சொல் ஆயிழை உரைத்தலும்-என்று பெரிதும் அஞ்சி அமிழ்தம் போன்ற இனிய சொல்லையுடைய மணிமேகலை சுதமதிக்குக் கூறாநிற்ப; சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல்-சுதமதி அவள் கூறிய அஞ்சுதகு சொற்களைக் கேட்டு நடுங்குகின்ற மயில்போன்று நடுங்கி; பாவையைப் பளிக்கறை மண்டபம்புகுக என்று ஒளித்து-பாவை போலும் மணிமேகலையை விரைத்து அழைத்துக் கொடுபோய்ப் பளிக்கு அறை மண்டபத்தினூடே புகுவாயாக என்று கூறிப் புகுவித்து மறைத்து; அறை உள்ளகத்து தாழ்கோத்து இரீஇ-அப் பளிக்கறையின் உள்ளே அமைந்த தாழக்கோலைக் கோத்துக் கொண்டு இருக்கச் செய்து என்க.

(விளக்கம்) சித்திராபதியோடுற்று என்றது சித்திராபதி அவ்விழி முயலுதலின் அவளோடு தொடர்புற்று என்பதுபடநின்றது. சித்திராபதி அங்ஙனம் முயலுதல் பின்னரும் அறியப்படும். கிளிந்த-கூறிய போலும்: ஒப்பில் போலி. ஈங்கு-இப்போழுது செய்கு-செய்வேன்; என்செய்கு என்றாள் உய்தற்கு வழிகாணாக் கையறவினால். வேடர்வரவு கண்டு துளிக்குறுமயில் என வருவித்துக் கூறலுமாம். கோத்து-கோப்பித்து எனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. என்னை? மணிமேகலையை உள்ளகத்தே தாழ்கோத்துக் கொண்டிருப்பித்து என்பதே கருத்தாகலான். தாழக் கோல் உள்ளகத்தேயே அமைந்திருக்குமாகலின் சுதமதி அதனைக் கோத்த லியையாமையும் உணர்க. புறத்திருந்தும் உள்ளகத்தே தாழ் கோத்தலும் கூடுமாம் பிறவெனின் அது பாதுகாவலுக்கு அமையா தென்க. இரீஇ-இருப்பித்து.

உதயகுமரன் சுதமதியைக் காண்டல்

89-96: ஆங்கது............அறிந்தேன்

(இதன் பொருள்) ஆங்கு அது தனக்கு ஓர் ஐவிலின் கிட்ககை நீங்காது நின்ற நேரிலை தன்னை-அப் பளிக்கறையினின்றும் ஏறத்தாழ ஐந்து விற்கிடைத் தொலைவிற்கு அப்பாற் செல்லாமல் அணுக்கமாகவே நின்ற சுதமதி; கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி-செய்தி யறியாமையாலே தன் தேரினைக் கலீர் என்னும் ஆரவாரத்தோடு தொடர்ந்து வந்த படைமறரோடே தனியே விரைந்து வந்த தன் தேரினையும் நிறுத்தித் தேரினின்று மிழிந்து தமியனாய் உவவனத்தினுட் புகுந்து; பல்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல்வேறு மலர்களையுடைய அப்பூம்பொழிலினூடே ஒரு கதிரவன் தோன்றி வருமாறு போலே காணப்பட்டு மணிமேகலை நிற்குமிடத்தை அறிதற் பொருட்டு; பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்-பூமரங்கள் செறித்த சோலையினூடும் பக்கங்களினும் செய்குன்றுகளின் பாலும் தனது செந்தாமரை மலர் போன்ற கண்ணின் பார்வையைப் பரப்பிப் பார்த்து வருகின்ற; அரசிளங் குமரன் அம் மன்னவன் மகன் ஆங்கு நின்றவளை நோக்கி; ஆரும் இல் ஒரு சிறை நின்றாய்-யாரும் இல்லாத தனியிடத்தே நின்றனை உன் திறம் அறிந்தேன். உன்னைப் பற்றிய செய்தி யான் முன்னமே அறிந்துள்ளேன் என்றான்; என்க.

(விளக்கம்) அது-பளிக்கறைமண்டபம். வில்-ஒரு நீட்டலளவை ஒருவில்-நான்கு முழம். ஐவிலின் கிட்ககை என்றது, ஏறத்தாழ இறுபது முழத்தொலைவு என்பதாயிற்று. மன்னர் முதலியோரைத் தொழுபவர் ஐந்துவிற்கிடைக்கு அப்பால் நின்றுதொழவேண்டும் என்னும் மரபு முளது. இதனை, ஐவிலினகல நின்றாங் கடிதொழு திறைஞ்சினாற்கு எனவரும் சிந்தாமணியானு முணர்க(1704). தானையொடு நிறுத்தி என்றமையால் தானே மறவரும் விறைந்தோடும் வேந்தன் மகன் தேரினை விடாது தொடர்ந்து வந்துற்றமை பெற்றாம். பகல்-கதிரவன். கண்பரப்பினன்-கட்பார்வையை இடையீடின்றிச் செலுத்தி. பரப்பினன்: முற்றெச்சம். மணிமேகலை எங்குளள் என்று ஆராய்வான் அவ்வாறு யாண்டும் நோக்கி வந்தான் என்பது கருத்து. 60-நேரிழை தன்னைக் கண்ட என ஒரு சொல்பெய்து இயைக்க. தனியே நின்றனை நீ யார் எனவினவத் தொடங்கியவன் அணுகிய பொழுது அவள் சுதமதியாதலை அறிந்து கொண்டமையின் உன்திறமறிந்தேன் என்கின்றான் நீ மணிமேகலைக்குத் துணையாக வந்தசெய்தியும் அறிந்துளேன் என்பது குறிப்பு.

மன்னவன் மகன் மணிமேகலையின்றிறம் சுதமதியின்பால் வினாதல்

97-104: வளரிள உரையென

(இதன் பொருள்) வளர் இள வள முலை மடந்தை தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ-நன்று நங்காய் வளருகின்ற இளைய அழகிய முலையினையுடைய மணிமேகலை தன் காதலன் காமத்தாலே தளர்கின்ற செவ்வியைத் தானே தெரிந்து கொள்கின்ற தண்மை யுடையளாயிருப்பாளல்லளோ? மெல்லியல் விளையா மழலை விளைந்து முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தன கொல்-அம் மெல்லியலாளுக்கு எழுத்துருவம் பெறாத இள மழலை எழுத்துருவம் பெற்றுச் செவ்வாயில் பாற்பற்கள் விழுந்து எயிறுகள் முளைத்து வளர்ந்து தம்முள் ஒத்து முத்துக்கள் போன்று நிரல்பட்டு விட்டன வன்றோ?; செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும் கொல் சிவந்த கயல்மீன் போன்ற அவளுடைய சிவந்த கண் அவளது செவியினருகே அடிக்கடி ஒடிப்போய் வெவ்விய மலரம்புகளையுடைய நெடிய காமவேள் தம்மைக் கொண்டு உலகினைக் மருட்டும் வியத்தகு தானே ஒரீஇ தமியள் இங்கு எய்தியது உரை என-இனி இவை கிடக்க மணிமேகலை பெரிய துறவோர் உறைகின்ற இடத்தினின்றும் தானே நீங்கித் தமியளாய் இவ் வுவவனத்திற்கு வந்த தற்குரிய காரணம் என்னை? இதற்கு மட்டுமேனும் விடை தருக என்று பணிப்ப என்க.

(விளக்கம்) ஈண்டு உதயகுமரன் சுதமதியை நோக்கி மணிமேகலையின் உறுப்புகளின் இயல்பையும் அவளியல்பையும் வினாதல் அவற்றின் இயல்பினை அறிந்துகொள்ளுங் கருத்தால் வினவும் அறியாவினாக்கள் அல்ல, அவையெல்லாம் அவள்பாலெழுந்த காமவேட்டை மிகுதியினாலே; இவ்வாறு அவற்றின் இயல்புகளைத் தன்னுள்ளே நினைந்து நினைந்து தானே இன்புறுதற் பொருட்டாம். ஆதலாற்றான் வினவியதொன்றற்கு விடை வருதலை எதிர்பாராமல் மேலும்மேலும் வினாக்களை அடுக்கிக் கொண்டே போகின்றான். இங்ஙனம் ஆதல் கைக்கிளைத்திணைக்கு இயல்பு. இதனை சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க.(அகத்-53).

தளரிடை-காமத்தால் நெஞ்சந்தளரும் செவ்வி. விளையாமழலை-இளமழலை முத்துக்கள் போன்று நிரல்பட்டனவா? என்றவாறு. சங்கத்தை நீங்கிவந்தமை கருதித் தமியள் இங்கு எய்தியது என்றான். இவ்வினாவிற்கு மட்டும் ஒருதலையாக நீ விடைதருக என்பான் ஈங்கு எய்தியது உரை என்றான்.

சுதமதி உதய குமரனுக்குக் கூறும் நயவுரைகள்

105-112: பொதியறை......கேட்டி

(இதன் பொருள்) மதுமலர்க் கூந்தல் சுதமதி பொதி அறைப் பட்டோர் போன்று உளம் வருந்தி-அதுகேட்ட சுதமதி புழுக்கறையிடத்தே அகப்பட்டுக் கொண்டவர் வீடுபெற விழிகாணாமல் வருந்துதல் போன்று உள்ளத்தினூடே பெரிதும் வருந்தி; உரைக்கும்-உதய குமரனுக்குக் கூறுவாள்; இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு-தான் இளையனாயிருத்தலால் இவன் முறைகூற அறியான் என்று முறை வேண்டினார் கருதுவர் என்று எண்ணி நாணமெய்தி முதியோனாக உள்வரிக் கோலம் பூண்டு அவையமேறி யிருந்து வழக்குரைக்குஞ் சான்றோர் பாராட்டும் வண்ணம் தீர்ப்புரை வழங்கிய திருமாவளத் தான் வழித் தோன்றலாகிய பெருமானுக்கு; அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-அறிவு பற்றி யாதல் சால்புடைமை பற்றியாதல் அரசியல் வழக்குப் பற்றியாதல் கையிற் செறிய வளையலணியும் பேதை மகளிராகிய எம்மனோர் ஏதேனும் அறிவுறுத்துதலும் உண்டேயோ; அனையது ஆயினும் யான் ஒன்றுகிளிப்பல்-என்னிலை அத் தன்மையுடையதே மாயினும் பெருமான் வினவியபடியால் யான் ஒன்று கூறத் துணிக்கிறேன்; வினை விளக்கு தடக்கை விறலோய் கேட்டி-ஆட்சித் தொழில் விளக்குகின்ற பெரிய கையினையுடைய கொற்றவனே கேட்டருள்க; என்றாள் என்க.

(விளக்கம்) வேந்தன் சீரின் ஆந்துணை இம்மையாலே சுதமதி இவனிடமிருந்து மணிமேகலையை மீட்டுக்கொடுபோதற்குச் சிறிதேனும் வழிகாணாமல் தன்னுள்ளே வருந்துகின்றாளாகலின் பொதியறைப் பட்டோர் போன்று என உவமை தேர்ந்துரைத்தார். இனி ஒழுக்கொடு புணர்ந்த அவனுடைய விழுக்குடிப்பிறப்பே ஒரோவழி நமக்கு உய்தி தருதல் கூடும் என்னும் கருத்தால் அதனையே அவனுக்கு எடுத்துக்காட்டுவாள். இளமை........மருகற்கு என அவனைப் பாராட்டுஞ் சுதமதியின் நுண்ணறிவு பாராட்டத்தக்கதொன்றாம். இதனால் அவளறிவுறுத்தும் வரலாறு வருமாறு

கரிகாலன் இளம்பருவத்திலேயே அரசு கட்டிலேறியவன்; அப் பொழுது முறை வேண்டிவந்த வாதியும் பிரதிவாதியும் ஆகிய இருதிறக்தாருமே இத்துணை இளைஞன் நம் வழக்கத்திற்குத் தீர்வுகாணமாட்டுவனோ என்று ஐயுறுவாராயினர். இதனைக் குறிப்பினால் அறிந்துகொண்ட கரிகாலன் நாளை அறனறிந்து மூத்த அறிவுடையார் ஒருவரைக்கொண்டு நுங்கள் வழக்கிற்கு முடிவு கூறுவிப்போம் என்று அவரைப் போக்கி விட்டான். மறுநாள் தானே முதியோள் கோலம்பூண்டு அறங்கூறவையமேறி இருந்து அவ் வழக்கிற்கு முடிவு கூறினன்; அம் முடிவு உலகம் உவப்ப தொன்றாயிருந்தது என்பதாகும். இதனை

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமது மக்கள் உவப்ப-நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்           (21)

எனவரும் பழமொழி வெண்பாவானு முணர்க.

இனி இதன்கண் சுதமதி நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செய்பலும் உண்டோ? என்று அவனைப் பாராட்டுஞ் சொற்றொடர் அரசன் மகனே நீ இப்பொழுது மேற்கொண்டிருக்குஞ் செயல் நின் அறிவுக்கும் பொருந்தாது, சான்றாண்மைக்கும் பொருந்தாது, அரசியலுக்கும் பொருந்தாது. ஆயினும் இவற்றை உனக்குக் கூறுந்தகுதி எனக்கல்லை. என்செய்கோ? என்னும் கருத்தினைக் குறிப்பாக அட்ககியிருத்தலும் உணரற்பாற்று.

கிளப்பல்-சொல்வேன். கேட்டி-கேள்.

மக்கள் யாக்கையின் இயல்பு

113-125: வினையின்......முன்னென்

(இதன் பொருள்) மக்கள் யாக்கை வினையின் வந்தது-மக்கள் பெற்றிருக்கின்ற உடம்பு முன்னே செய்த வினையின் பயனாக வந்து தோன்றிய தொன்றாம்; வினைக்கு விளைவு ஆயிது-மீண்டும் வினைகள் விளைதற் கிடனாயது; புனைவன நீங்கின் புலால் புறத்து இடுவது-அது தானும் தனது இழிதகைமையை மறைத்தற் பொருட்டுப் புனைகின்ற ஆடை முதலியவற்றைப் புனையாது நீங்கி விடிலோ புலால் நாற்றத்தைப் புறமெல்லாம் பரப்புமொரு புன்மையுடையதாம்; மூப்பு விளவு உடையது-கணந்தோறும் முதுமையுறுவதும் ஒருநாள் இறந்து படுவதுமாம்; தீப்பிணி இருக்கை துன்பந் தகும் பிணிகள் பலவும் இருத்தற் கிடமாம்; பற்றின் பற்று இடம்-பற்றுக்கள் பற்றுதற்கியன்றதோ ரிடமாம்; குற்றக் கொள்கலம்-காம முதலிய குற்றங்களை எல்லாம் தன்பாற் கொண்டிருக்கின்ற மட்கலம் போல்வதாம்; அரவு அடங்கு புற்றின் செற்றச் சேக்கை-நச்சுப் பாம்பு அடக்கி யிருக்குமொரு புற்றைப் போன்று சினம் என்னும் தீய பண்பு அடக்கியிருக்குமொரு இருக்கையாம்; அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் என்று கூறப்படுகின்ற நால்வகைத் துன்பங்களும் நீங்காததொரு நெஞ்சத்தைத் தன்பால் எஞ்ஞான்றும் கொண்டிருப்பதாம்; இது என வுணர்ந்து-இஃதென்று இதனியல் புகளை ஆராய்ந்துணர்ந்து; மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் அறிவு மிக்க அரசன் மகனே இவ்வுடம்பினை அகம் புறமாக மாற்றி அகக் கண்ணால் நோக்கி யருள்வாயாக; என்று அவள் உரைத்த இசைபாடு தீஞ்சொல் -என்று அச் சுதமதி கூறிய பொருத்தமான இனிய சொல்;சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்-சென்று அவன் நெஞ்சத்திலே பதியு முன்பே; இளங்கோ மன் பளிக்கு புறத்து எறிந்த பவளப் பாவையின் இளவரசனாகிய உதயகுமரன் கண் முன்னர்ப் பளிங்குப் பேழையுள் வைக்கப்பட்டுத் தன் உருவத்தைப் புறத்தே தோற்றுவிக்கும் பவளத்தாலியன்றதொரு பாவையைப் போன்று; இளங்கொடி தோன்றும்-மணிமேகலையின் உருவம் பளிக்கறையூடிருந்து தோன்றா நிற்கும் என்பதாம்.

(விளக்கம்) வினை-மனமொழிமெய் என்னும் மூன்றிடத்தும் தோன்றும் பத்துவகைப்படுந் தீவினையும் அவற்றிற்கு மாறாகிய நல்வினைகளுமாம். முற்பிறப்பிலே செய்த வினையின் பயனாகத் தோன்றியது; பின்னும் பிறத்தற்கேதுவாகிய வினைகள் விளைதற்கிடனாவது என்றவாறு. புனைவன-ஆடையும் நறமணப் பொருள்களுமாம். விளிவு-சாவு. பிணிவாத பித்த சிலேத்துமங்களின் சமமின்மையாலே உடம்பிற்றோன்றும் எண்ணறந்த பிணிகள். பிணியெனப்படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற்றிரிந்து உடம்பு இடும்பைபுரிதல் என இந்நூலுள் (30-98-9) கூறப்படுதலறிக. மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர், விளிமுதலா எண்ணிய மூன்று எனவரும் திருக்குறளும்(941) நினைக. பற்று-பசைஇய அறிவு, அவ்வறிவு பற்றியிருக்குமிடம் என்க. குற்றம் காமவெகுளி மயக்கங்கள். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம்-சினம். சேக்கை-தங்குமிடம் அவலம்-துன்பம் தோன்றியநிலை. கவலை அதுதீர்க்க வழிதேடும் நிலை. கையாறு-வழிகாணாது திகைக்கும் நிலை. அழுங்கல் துன்பத்தே அழுந்திவருந்தும் நிலை. தவலா-நீங்காத, ஈறுகெட்டது. இதுவென இத்தன்மைத்தென்று. அறிவுமிக்கோய் என்க. புறமறிப்பார்த்தலாவது யாதானும் ஒரு பையைப் புறம் அகம் ஆகும்படி புரட்டிப்பார்த்தால், மற்றதனைப் பைமறியாய் பார்க்குப் படும் என்பது நாலடி(42). அங்ஙனம் பார்க்குங்கால் என்பும் தடியும் உதிரமும் அன்றி இவ்வாக்கையில் வேறு ஏதும் சிறப்பின்மை அறியப்படும் என்பது குறிப்பு. இங்ஙனம் கூறியது இத்தகைய இழிதகைய யாக்கையே மணிமேகலையின் யாக்கையும், அதனை நீ வளரிளவனமுலை எனவும், முளையெயிறு அரும்பி முத்து நிரைத்தன்ன எனவும், செங்கயல் நெடுங்கண் எனவும் பாராட்டுதல் நின் அறிவுடைமைக்கு அழகாகுமோ. அங்ஙனம் கூறாதே கொள் என்னும் குறிப்பெச்சப்பொருள் தோற்றுவித்தற் பொருட்டாம். இவள்மொழி பொருளியல்புணர்த்தும் மெய்ம்மைத் தன்மைத்தாதல் கருதி இசைபடுதீஞ் சொல் என்றார். அவ்வறையின் பளிங்கு புறத்தே புறப்படவிட்ட இளங்கொடி உருவம் பவளம் பாவையின் இளங்கோமுன் தோன்றும் என இயைப்பினுமாம்.

இனி, இக்காதையினை-காண்பன காண் காண் எனச் சுதமதி காட்ட மணிமேகலை காண்புழி மன்னவன் சிறுவன் வருவோன் இருந்தோன்றன்னை போது என்றலும் உரைப்போன் என்றலும் எய்தி உரைத்துக் கடைஇக் குறுக ஒலிமணிமேகலை செவிமுதல் இசைத்தலும் மணிமேகலை உரைத்தலும் இரீஇ நின்ற நேரிழை தன்னை உதயகுமரன் நின்றோய் அறிந்தேன் தன்மையள் கொல்லோ உரைக்குங்கொல் உரையெனச் சுதமதி உண்டோ கிளிப்பல் கேட்டி என்றுரைத்தசொல் சேராமுன்னர் இளங்கோமுன் இளங்கடி தோன்றுமால் இயைத்திடுக.

பளிக்கறை புக்க காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar