பதிவு செய்த நாள்
27
மே
2017
04:05
* மனஒருமைப்பாடு தான் வெற்றியின் ரகசியம் என்பதை அறிந்தவர்களே புத்திசாலிகள். ஆன்மிக வாழ்வில் ஈடுபடும் யோகிகளுக்கு மட்டுமே ஒருமைப்பாடு தேவை என்று எண்ணுவது தவறு. வாழ்வில் எந்த நிலையில் இருப்பவர்களுக்கும் இது அவசியமானதே.
* கொல்லர், தச்சர், நாவிதர், நெசவாளர் போன்றவர்கள் தொழிலில் சிறிது கவனம் தவறினாலும் ஆயுதங்கள் கையிலோ,
உடம்பிலோ பட்டு விடும் அபாயம் இருப்பதால் அவர்கள் விழிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கலாம். அதைப் போல மாணவர்களும் மனஒருமையுடன் படித்தால் கல்வியில் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும்.
* கீதையில் கிருஷ்ணர், “அர்ஜுனா! மனம் அலை பாயும் தன்மை கொண்டது. அதைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமான செயல். இருந்தாலும் விடாமுயற்சியும், கடின பயிற்சியும் கொண்டவர்களால் மனதைக் கட்டுப்படுத்த முடியும்,” என்கிறார்.
* மனதைக் கட்டுப்படுத்தும் முன், அதன் இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும். உலக ஆசைகளில் சிக்கி பைத்தியம் போல திரிவது, அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, ஆகாயத்தில் கோட்டை கட்டுவது, கொடுத்த வேலையை புறக்கணித்து விட்டு மற்றதைச் சிந்திப்பது அதன் இயல்பாக உள்ளது.
* மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால் சிதறடிக்கும் சூழ்நிலையில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காக ஊரை விட்டு காட்டுக்கு ஓட வேண்டும் என்பதில்லை. அன்றாட வாழ்வில் ஈடுபட்டாலும், தேவையில்லாத பிரச்னைகளில் மனம் சிக்கி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்தும் மனதின் வாகனங்களாக உள்ளன. இது தேவை, தேவையில்லை என்பதை சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு கிடையாது. அதனால் மனம் கண்டதையும் சிந்தித்து செயலாற்றுகிறது. ஆனால், புத்தியில் தெளிவு இருக்குமானால் எளிதாக மனதைக் கட்டுப்படுத்த முடியும்.
* மனம் அதன் விருப்பம் போல் செயல்பட்டால் என்ன என்றும், ஏன் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிலர் யோசிக்க கூடும். மனக்கட்டுப்பாடு பெற்றவர்களால் மட்டுமே வாழ்வில் அரிய பெரிய செயல்களில் ஈடுபட முடியும். இல்லாவிட்டால் எளிய செயலை முடிக்கக் கூட சிரமப்பட நேரிடும்.
* சுவாமி விவேகானந்தர் ஒருமுகப்பட்ட மனதை ஒளிவிளக்கு என்று சிறப்பித்துக் கூறுகிறார். இருட்டில் கிடக்கும் பொருளைக் கூட, விளக்கு தெளிவாகக் காட்டும். அது போல மனம் ஒருமுகப்பட்டால் தெளிவும், உற்சாகமும் அதில் குடி கொள்ளும். அதன்
பின் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வம் பிறக்கும்.
* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பது அவசியம். படிக்க உட்கார்ந்த பின், தேவையற்ற சிந்தனையில் ஈடுபடக் கூடாது. படுத்துக் கொண்டோ, நடந்து கொண்டோ இல்லாமல், நாற்காலி மேஜையில் அமர்ந்து படிப்பது நல்லது.
* ஒரே சமயத்தில் பல பாடங்களைப் படிக்காமல், ஒரு பாடத்தை மட்டும் படிப்பது நல்லது. வாசிப்பதற்கும், படிப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது. மேலோட்டமாக வாசிப்பதை விட, ஆழ்ந்து படிக்கும் போது மட்டுமே பாடக் கருத்துகள் மனதில் பதியும்.
* தேர்வு சமயத்தில் மட்டும் படிப்பது மாணவர்களின் இயல்பாக உள்ளது. வகுப்பில் முதன்மை பெற விரும்புபவர்கள் தினமும்
படிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
* உடம்பும், உடுத்தும் ஆடைகளும் சுத்தமாக இருந்தால் மனம் உற்சாகமுடன் இருக்கும். புத்தகங்களும், எழுது பொருட்களும் படிக்கும் அறையில் அங்குமிங்கும் இறைந்து கிடக்காமல் அடுக்கி வைக்கப்படுவது அவசியம்.
* மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கை இருப்பவனுக்கே வாழ்வில் வெற்றி உண்டாகும். - சொல்கிறார் புருஷோத்தமானந்தர்