எந்த செயலில் இறங்கும் முன்பும் யோசித்து இறங்க வேண்டும். இறங்கிய பிறகு எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை முறியடித்து வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு மன்னன் தன் படைகளை எதிரி நாட்டுக்கு போருக்கு அனுப்பினான். அந்த இருநாடுகளையும் ஒரு பாலம் பிரித்தது. பாலத்தைக் கடந்து சென்ற படைகள் எதிரிப்படையுடன் மோதின. எதிரிப்படை பலமாக இருந்ததால், மன்னனின் படை திணறியது. பாலத்தின் வழியே புற முதுகிட்டு ஓடி வந்தது. மன்னனுக்கு அவமானம் தாங்கவில்லை. படைத்தலைவனைக் கடிந்து கொண்டான். “என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. நீ மீண்டும் படைகளுடன் போ. எனக்குத் தேவை; எதிரி மன்னனின் தலை,” என சொல்லி அனுப்பி விட்டான். படைத்தலைவன் மீண்டும் சண்டைக்கு போனான். அப்போதும் எதிரிகளை அசைக்க முடியவில்லை. படைகள் மீண்டும் பாலம் வழியே தப்பி ஓடி வந்து விட்டன. மன்னன் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டான். “வாருங்கள்,மீண்டும் போவோம். இந்த படைத்தலைவன் எனக்குத் தேவையில்லை.
நானே தலைமையேற்று வருகிறேன்,” என்றான். படைகள் மன்னன் தலைமையில் புறப்பட்டு, எதிரிநாட்டுக்குள் நுழைந்தன. எதிரிகளின் கை ஓங்கியது. மன்னனின் படைகள் பாலத்தை நோக்கி ஓடின.அவன் யோசித்தான்.அந்த பாலத்தை குண்டு வீசி தகர்த்து விட்டான். படைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், படு ஆவேசமாக போரிட்டனர். எதிரிகள் தோற்க, எதிரி மன்னனை சிறைபிடித்தான். அவனது நாட்டைக் கைப்பற்றி தன்னுடையதாக்கிக் கொண்டான் மன்னன். பார்த்தீர்களா! உயிருக்கு ஆபத்து வரும்போது தான், உத்வேகம் வருகிறது. நாம் எதைச் சார்ந்தும் இருக்கக் கூடாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கி வெற்றி பெற வேண்டும். “கலப்பையின் மேல் தன் கைகளை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும், தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவன் அல்ல,” என்கிறது பைபிள். முன் வைத்த காலை பின் வைப்பவன், இறைவனால் வெறுக்கப்படுவான்.