பதிவு செய்த நாள்
29
மே
2017
12:05
ஆர்.கே.பேட்டை: சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தேர் திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் சிறப்பு வாய்ந்த கருட சேவை நடந்தது. நாளை சக்கர ஸ்தானத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.பே ட்டை , பிராமணர் தெருவில் அமைந்துள்ள சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் நாள் உற்சவத்தில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, சிம்மம், சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் உலா வந்த பெருமாள், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சிறப்பு மிக்க கருட வாகனத்தில் சேவை சாதித்தார். மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நடந்த ஊர்வலத்தின் போது, பெண்கள் வாசல் தெளித்து, மாக்கோலம் போட்டு மாடவீதிகளை அலங்கரித்தனர். இரவு 8:00 மணிக்கு புறப்பட்ட கருட வாகன சேவை , இரவு 10:30 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. நேற்று இரவு, கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இன்று தேரில் உலா புறப்படுகிறார். மாலை 4:00 மணிக்கு, ஸ்தாபன திருமஞ்சனம் நடக்கிறது. நாளை காலை, தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.