பொள்ளாச்சி : மூன்று நாட்கள் பக்தர்கள் சூழ, வலம் வந்த சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, மஞ்சள் நீராடலுடன் நிறைவு பெற்றது. சூலக்கல் மாரியம்மன் தேர்திருவிழா கடந்த ,24ம் தேதி மாவிளக்கு ஊர்வலத்துடன் துவங்கியது. அன்று இரவு அம்மன் திருக்கல்யாணத்துடன் திருவிழா களைகட்டியது. தொடர்ந்து, மூன்று நாள் தேரோட்டத்தின் முதல்நாளன்று (25ம் தேதி) தேர் வடம்பிடித்தல் பக்தி கோஷத்துடன் துவங்கியது. குறிப்பிட்ட நிலையில் இருந்து இரண்டாவது நாளும், கோவிலின் தென்மேற்கு மூலையில் இருந்து மூன்றாவது நாளாக நேற்றும் தேர் வடம் பிடிக்கப்பட்டு, இரவு தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது. கம்பம் கலைத்து ஆற்றில் விடப்பட்டது. தொடர்ந்து மஞ்சள்நீராடலுடன் மூன்று நாள் தேரோட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக, தேர் இழுக்கப்பட்ட மூன்று நாட்களிலும், இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. மூன்று நாள் தேர்திருவிழாவில், 18 கிராம மக்கள் மட்டுமன்றி வெளியூர் பக்தர்களும் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.