சேலம்: சேலத்தில் உள்ள, மூக்கரகாளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. சேலம், அம்மாபேட்டை அடுத்த பெரிய வீராணத்தில் மூக்கரகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 26ல் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடந்தது. 7:00 மணிக்கு பால்குட ஊர்வலம் கொண்டு வந்து, அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். 108 மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு தீபாராதனை, 9:00 மணிக்கு ஓம் சக்தி, பராசக்தி முழக்கங்களோடு சிவாச்சாரியார்கள் கோபுர கலசங் களுக்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். கலந்து கொண்ட மக்களுக்கு, புனிதநீர் தெளிக்கப்பட்டது.