பதிவு செய்த நாள்
30
மே
2017
10:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
நேற்று மாலை உற்சவர் சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சுவாமி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மண்டபத்தின் மைய பகுதியில் உள்ள மேடையின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து சுவாமி அருள்பாலித்தார். இந்த வசந்த உற்சவம் ஜூன் 6 வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 7 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். அன்று பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்து வரும் பால், சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 8 காலை சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவார்.