பதிவு செய்த நாள்
30
மே
2017
11:05
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்த விநாயகர் கோயிலை, இந்து அறநிலையத்துறை பராமரிக்காமல் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
1964ல் வங்க கடலில் எழுந்த புயலில் வணிக நகரமான தனுஷ்கோடியை புரட்டி போட்டதில், ரயில்வே ஸ்டேஷன், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து, புயலின் எச்சங்களாய் காட்சியளிக்கிறது. இருப்பினும் விநாயகர் கோயில், மாதா சர்ச் சேதமடைந்தாலும் 53 ஆண்டுகளாக இன்று வரை இடியாமல் கம்பீரமாக சுற்றுலா பயணிகளுக்கு காட்சியளிக்கிறது. கைவிட்ட அரசு தனுஷ்கோடியில் வழிபாட்டு தலம், இடிந்த கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பித்து, சுற்றுலா பயணிகளை கவர ஒளி, ஒலி காட்சி அமைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ெசாந்தமான தனுஷ்கோடி விநாயகர் கோயிலில் விரைவில் மராமத்து பணி துவக்கி பாதுகாக்கப்படும் என மாநில இந்து அறநிலைதுறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை மராமத்து பணி துவக்காமல், மாநில அரசு அலட்சியமாக உள்ளது.
இதனால் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயில், உப்பு காற்றில் முழுவதும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், முதல் கட்டமாக விநாயகர் கோயிலை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில்: இந்து கலாச்சார நகரமான தனுஷ்கோடியில் விநாயகர் கோயிலை பழமை மாறாமல் பாதுகாக்க இந்து அறநிலைதுறை, மாநில அரசு தவறி விட்டது. தனுஷ்கோடியில் விரைவில் மராமத்து பணி துவக்காவிடில் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்வேன், என்றார்.