பதிவு செய்த நாள்
30
மே
2017
11:05
மாடம்பாக்கம் : மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு, பொதுமக்கள் செலவில், 37 லட்சம் ரூபாயில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது.
செம்பாக்கத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரக, நாக தோஷம் உள்ளோர், இந்த கோவிலில் உள்ள சரபேஸ்வரரிடம் வேண்டி கொள்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில், இந்த கோவில் துாணில் உள்ள சரபேஸ்வரருக்கு, உற்சவ புறப்பாடுடன் விசேஷ பூஜை நடக்கிறது.
கோவிலுக்கு என, தனியாக தேர் இல்லாததால், பல ஆண்டுகளாக தேர் திருவிழா நடை பெறவில்லை. ஏராளமான சொத்துக்கள், வருவாய் இருந்தும், இந்து சமய அறநிலையத்துறையினர், தேர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாடம்பாக்கம் பகுதி பொதுமக்கள், பக்தர்கள் இணைந்து, தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு, புதிதாக தேர் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள் பங்களிப்புடன், 37 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர், நேற்று காலை, 7:15 மணிக்கு, நான்கு மாட வீதிகளிலும் வெள்ளோட்டம் விடப்பட்டது. 21 டன் எடையுடன், 37 அடி உயரமும், 13 அடி அகலத்தில், ஐந்து அடுக்கு தட்டுகளை கொண்ட புதிய தேர், கம்பீரமாக உள்ளது. இது, இலுப்பை மற்றும் தேக்கு மரங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு வேதங்களை உணர்த்தும் வகையில், தேரின் முகப்பில், நான்கு குதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலின் வரலாற்றை குறிக்கும் வகையில், தேரினை சுற்றிலும், மூன்று வரிசைகளில், 140 மரச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேரைச் சுற்றிலும், 150 வெண்கல மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் ஒவ்வொரு சக்கரமும், 2.59 மீ., விட்டம் கொண்டது. இந்தத் தேருக்காக, தலா, 1,000 கிலோ எடை, 6 அடி உயரம் கொண்ட இரும்புச் சக்கரங்கள், திருச்சி ’பெல்’ நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வரும், ஜூன், 5ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் செல்ல வசதியாக மின் கம்பங்கள், மின் கம்பிகள் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு செல்ல விரும்புவோர், குரோம்பேட்டையிலிருந்து, எஸ்-3 சிற்றுந்து மற்றும் கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து, 51-ஜி பேருந்து தடங்களில் செல்லலாம்.