பதிவு செய்த நாள்
30
மே
2017
12:05
திருத்தணி: விஜயராகவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் ஆகிய கோவில், 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், ஏழு யாக சாலைகள்,108 கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், கும்ப திருவாராதனம் மஹா பூர்ணாஹூதியும், காலை, 6:30 மணிக்கு அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி,முன்னாள் நகர சேர்மன் சவுந்தர்ராஜன் ஆகியோர் கலசங்கள் ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, காலை, 7:10 மணிக்கு, விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி மேல் அமை க்கப்பட்ட கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். மேலும், கலச நீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:45 மணிக்கு, உற்சவர் விஜயராகவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றிஉள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
300 ஆண்டுகளுக்கு பின் திருக்கல்யாணம்: விஜயராகவ பெருமாள் கோவில் புதியதாக புனரமைக்கப்பட்ட பின், 50 ஆண்டுகளில், மூன்று முறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று, நான்காவது முறையாக கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆனால், இம்முறை நடந்த கும்பாபிஷேகத்தின் போது, திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. 300 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்துள்ளது என, கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.