பதிவு செய்த நாள்
30
மே
2017
12:05
பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 6 ம் தேதிதேரோட்டம் நடக்கிறது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் கொண்ட ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்சவ விழா நேற்று காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் வீதியுலா வந்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை வெள்ளி நந்தீஸ்வரர், ஹம்ச, பூத, சிம்ம, யானை, வெள்ளி ரிஷபம், கைலாச, கிளி, சேஷ, காமதேனு வாகனங்களில் வீதியுலா வரவுள்ளனர். முக்கிய நிகழ்வான ஜூன் 5 ல் நடராஜர் வீதியுலா, மறுநாள் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 7 தீர்த்தவாரியும், ஜூன் 12 ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும்.