பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோவிலில் 60 ஆண்டிற்கு பிறகு நேற்று திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை குமரக்கோயில் தெருவில் பழமை வாய்ந்த முத்துக்குமரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை பூசம் அன்று திருத்தேர் உற்சவத்தின் போது முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வலம் வருவது வழக்கம். திருத்தேர் பழுதடைந்தால் கடந்த 60 ஆண்டுகளாக உற்சவம் நடக்கவில்லை. இந்நிலையில் சத்ருசம்ஹார த்ரிசத வழிபாட்டுக் குழு சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் செய்யப்பட்டது. நேற்று திருத்தேர் வெள்ளோட்டத்தையொட்டி சத்ரு சம்ஹார ஹோமம், முருகனுக்கு பிரகார உற்சவமும் நடந்தது. அதனைதொடர்ந்து திருத்தேர் வெள்ளோட்டம் உதவி ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் வந்தடைந்தது. விழாவில் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சத்ருசம்ஹார த்ரிசத வழிப்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.