சுந்தரருக்காக அந்த ஈஸ்வரனே வந்து உணவளித்த தலத்தில் இன்று ஈஸ்வரனுக்கு ஒரு கால பூஜை கூட இல்லாமல் இருக்கிறது. நீ போய்ப் பாரேன் என மகா பெரியவா கனவில் சொல்ல, மூர்த்தி என்பவர் போய்ப் பார்த்த தலமே திருக்குருகாவூர். வெள்விடை நாதர், காவியங்கண்ணியம்மை எனும் அழகிய திருநாமங்களுடன் அம்மையப்பன் இருவரும் சீர்காழி அருகே எழுந்தருளியுள்ள தலம். போகர் பழனிக்குச் செல்லும் முன் வணங்கிய பிள்ளையார், மனக்கிலேசங்களைப் போக்கும் சுப்ரமண்யர் என இன்னும் பல அற்புதங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன. இப்படிப்பட்ட அற்புதமான க்ஷேத்திரத்தில் பக்தியும், ஆத்மார்த்தமுமாக இறைவனுக்குக் கருவறை தீபம் ஏற்றிப் பூஜிக்கும் பாக்கியம் கிடைத்தது.