துடுக்குத்தனம் நிறைந்த இளைஞரான விவேகானந்தர் முதன் முதலில் ராமகிருஷ்ணரைச் சந்தித்தார். அவரிடம், கடவுள் இருக்கிறாரா? அவரைக் காட்ட முடியுமா? நான் உங்களைப் பார்ப்பது போல், கடவுளை நேருக்கு நேர் பார்க்க முடியுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். புன்முறுவல் பூத்த முகத்துடன் பரமஹம்சரும் பதில் தந்தார். அங்கிருந்தவர்கள், குருதேவரே! இவன் நாத்திகன், இவனுக்கு நீங்கள் பதில் சொல்வது தவறு. அதனால் எப்பயனும் விளையாது! என்றனர். அதற்கு பரமஹம்ஸர், ஏற்கெனவே சாயம் ஏற்றப்பட்ட துணியில் இன்னொரு நிறச் சாயத்தை ஏற்றினால், அச்சாயம் நன்றாக ஏறாது. ஆனால் வெள்ளைத் துணியில் எந்தச் சாயம் ஏற்றினாலும் நன்றாக ஏறும். இந்த இளைஞனின் உள்ளம் களங்கப்படாத வெள்ளைத்துணி, இதில் எது ஏறினாலும் நிலைத்து நிற்கும் என்றார்.