பணக்காரர் ஒருவர் தாராளமாக தானம் செய்து வந்தார். உறவினர்கள், ஏழை நண்பர்கள், ஆலய நிர்வாகிகள், அனாதை விடுதிகளுக்கு நன்கொடை கேட்டு வந்தனர். எல்லாருக்கும் சளைக்காமல் தந்தனர். கொஞ்ச காலம் சென்றது. இங்கு போனால் உதவி கிடைக்கும் என நினைத்து ஏராளமானோர் நேரம் காலம் தெரியாமல் குவிய ஆரம்பித்து விட்டனர். இது அந்தக் குடும்பத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. வந்தவர்கள் மீது கோபப்பட்டனர். திருப்பி அனுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், அவ்வீட்டு தலைவி ஜெபம் செய்து கொண்டிருந்தார். மெதுவான குரலில் தேவன் பேசுவது போல் கேட்டது. “மகளே! பட்டுப் போன மரத்தைத் தேடி பறவைகள் செல்வதில்லை. காய்த்த மரங்களைத்தானே அவை நாடும். உன்னைக் கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ மிகுதியான கனி கொடுப்பாயானால், இன்னும் உன்னை ஆசிர்வதிக்க காத்திருக்கிறேன்,என்றது அக்குரல். இது அப்பெண்மணியை சிந்திக்க வைத்தது. கண்ணீர் வடித்து தன் தவறுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக் குடும்பத்தினர் மீண்டும் தானம் செய்யத் துவங்கினர். நீங்கள் எப்போதும் கனி தரும் செடியாய் இருங்கள். தானம் கேட்க வருபவர்களிடம் எரிச்சல் படாதீர்கள்.