மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஷண்முகருக்கு குடம் குடமாகப் பாலாபிஷேகம் நடைபெறும். திருவிழாக்களின்போது தெய்வானையுடன் தான் உலா வருவார் முருகப்பெருமான். ஆனால் வைகாசி விசாகத்தன்று மட்டும் தெய்வானை மற்றும் வள்ளியுடன் விசாக குறடு மண்டபத்துக்கு எழுந்தருளி தரிசனம் தருவார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது. சிம்மாசலம், இங்குள்ள வராக நரசிம்மர் வரப்பிரசாதியாய் அருள்கிறார். ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு சாத்தப்பட்டிருக்கும் இவரை வைகாசி விசாகத்தன்று மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டுக் காணலாம். இந்த நிகழ்வு சந்தன யாத்ரா என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூர் சாலையில் அமைந்திருக்கிறது பாலதண்டாயுதபாணி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வர பார்வதி யாகம் நடைபெறுகிறது. யாக பூஜையில் கலந்து கொள்ள வருபவர்கள் உதிரிப்பூ, பூச்சரம், எலுமிச்சம்பழம் இவற்றோடு தங்கள் ஜாதகத்தையும் எடுத்துவந்து, பூஜையில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். இப்படிச் செய்தால் விரைவில் திருமணப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.