சிவபெருமானுக்கு எவ்வாறு பஞ்சபூத ஸ்தலங்கள் எனப்பழைமையான இடங்கள் ஏற்பட்டனவோ, அம்மாதிரியே மகா விஷ்ணுவுக்கென தனியே எட்டுத் தலங்களை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என தனிப் பெயருடன் அழைத்து, அவை மற்றச் சிறந்த தலங்களைக் காட்டிலும் தனிமையான மகிமை உள்ளவையென நம் பெரியோர்கள் கருதினார்கள். இந்தத் திருத்தலங்கள் தென்நாட்டில் நான்கும், வட நாட்டில் நான்குமாகப் பரவிக் கிடக்கின்றன.
பதரீகாச்ரமம்: பனி படர்ந்த இமயமலைச் சாரலிலே, கடல் மட்டத்துக்குச் சுமார் 10,300 அடிக்கு மேலே, அலகநந்தா நதியின் வடகரையில் உள்ளது இத்தலம். இங்கு பகவான் தப்த ரூபியாக - அதாவது உஷ்ண நிலைமையில் - இருப்பதாகக் கருதப்படுகிறது. பத்ரீ நாராயணன் கோயிலுக்கு எதிரே உள்ள வெந்நீர் ஊற்றுத்தான் பகவானின் இயற்கை அம்சமாகும்.
நைமிசாரண்யம்: உத்தரப் பிரதேசத்தில், சீதாபூருக்கு வடக்கே அமைந்திருக்கும் தலம் இது. இங்கு மஹாவிஷ்ணு அரண்யரூபமாக - அடர்ந்த காடாக - காட்சியளிக்கிறார். இந்தக் காட்டிலேதான் பழம்பெரும் முனிவர்கள் தவமியற்றி முக்தியடைந்தனர்.
புஷ்கரம்: ஆஜ்மீரிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கும் இந்தத் தலத்தில், இறைவன் தீர்த்த ரூபியாகக் காட்சித் தருகிறார். இங்கு புஷ்கர்ஜி என்று அழைக்கப்படும் திருக்குளம் ஒன்று உள்ளது. இதையே பகவானின் அம்சமாகக் கருதி, பூஜை முதலியன செய்து வருகிறார்கள்.
திருவேங்கடம்: கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடசேப் பெருமானின் உறைவிடமான திருமலையே பகவானின் ஓர் சேஷ (மலை) ரூபியாகக் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகம். இதனாலேயே ராமாநுஜர் போன்ற பெரியோர்கள் திருமலையைத் தங்கள் பாதம் படாதபடி முழங்கால்களால் ஊர்ந்து சென்றனர் எனச் சொல்வார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்: சிதம்பரம் திருத்தலத்துக்கு அருகிலுள்ளது இந்தத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீபூவராஹ ஸ்வாமியை வாயு (காற்று) ரூபி என்பார்கள். தண்டகாசுரன் வதம் இங்கேதான் நடந்ததாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
திருவரங்கம்: பூலோக வைகுண்டம் என்று கருதப்படும் இத்தலத்தில், பகவான் பிரணவ ரூபமாகக் காட்சி தருகிறார். ஆகையால்தான் அவர் எழுந்தருளியிருக்கும் விமானத்துக்கு ப்ரணவாகார விமானம் எனப் பெயர் வந்தது. இவ்விமானம் ஆதியில் பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்டு, பிறகு ராமபிரனால் விபீஷணனுக்குக் கொடுக்கப்பட்டதாகும்.
வானமாமலை: நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்தத் தலத்தில் பகவான் தைல (எண்ணெய்) ரூபியாக இருப்பதை யொட்டி, இங்குள்ள தோதாத்ரி நாதப் பெருமாளுக்குத் தினமும் நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகப் பிரசாதம் சிறந்த ஔடதமாகக் கருதப்படுகிறது.
முக்தீநாராயணன்: நேபாளத்தின் தலை நகரமான காட்மாண்டுவுக்கு வடமேற்கே இமயமலைச் சிகரம் ஒன்றில் இருக்கிறது. இங்கு பகவான் சீதள ரூபியாக - அதாவது பனி நீரால் நிரம்பிய ஏரியாகக் காட்சியளிக்கிறார். இங்கு சென்று திரும்புவது கடினம் என்பார்கள்.