இயற்கையிலேயே நாகலிங்கத்தைப் போல மலரும் பூக்களைக் கொண்ட மரம் உள்ளது. இந்த அற்புத மரத்தை நாகலிங்க மரம் என அழைக்கின்றனர். நெடிதுயர்ந்து வளரும் மரங்களில் நாகலிங்க மரமும் ஒன்றாகும். இப்பூவில் ஐந்து பெரிய இதழ்கள் அகன்ற கிண்ணம்போல் இருக்க, நடுவில் பெரிய வட்டமான தட்டு போன்ற அமைப்பு உள்ளது.
அதன் நடுவிலுள்ள விதை கிரீடம் தரித்த சுயம்புலிங்கம் போல் காட்சியளிக்கிறது. தட்டு போன்ற அமைப்பின் ஒருபுறமாக உள்ள மகரந்த இதழ்கள் திரண்டு கேள்விக் குறிபோல் வளைந்து நாக படம்போல வளைத்து லிங்கத்துக்குக் குடையாக அமைந்துள்ளது. இது பலநூறு தலைகளுடன் கூடிய பாம்பு குடைபிடிப்பது போல் உள்ளது. இந்தப்பூ இளம்சிவப்பு, பொன்மஞ்சள், வெண்மை, பசுமை கலந்த சிவப்பு எனப் பல வண்ணங்களின் கலவையாக, மென்மையாக கண்ணைக் கவரும் வடிவில் உள்ளது. சிலர் இப்பூக்களை ஆசனத்தில் வைத்து சிவலிங்கமாகவே பூசிக்கின்றனர். இதனைப் புஷ்பலிங்கம் என்றும் அழைக்கின்றனர்.