கற்பிக்கின்ற பேராசிரியராக இருந்தாலும் சரி, கற்றுக் கொள்கின்ற மாணவனாக இருந்தாலும் சரி, அறிவை நாடுகின்ற ஒவ்வொருவரின் விஷயமும் இதுதான். நீங்கள் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் பேச்சு உங்களைக் கவருமானால் உங்கள் மனம் அதில் ஒருமுகப்படும். இந்த ஒருமைப்பாட்டின் காரணமாக அப்போது மணி அடிப்பதுகூட உங்கள் காதில் விழாது. மனத்தை ஒருமுகப்படுத்துகின்ற அளவுக்கு உங்களால் எனது பேச்சைப் புரிந்துகொள்ள முடியும். எனது அன்பையும் ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்த முடிகின்ற அளவுக்கு நான் சொல்ல விரும்புவதை என்னால் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். இந்த ஒருமைப்பாட்டு ஆற்றல் அதிகமாகும் அளவுக்கு ஏற்ப நாம் பெறுகின்ற அறிவின் அளவும் அதிகமாகும். ஏனெனில் அறிவு பெறுவதற்கான ஒரே வழி இதுவே. செருப்புக்குப் பாலீஷ் போடுபவன் கூடத் தன் மனத்தை ஒருமுகப்படுத்தினால் நன்றாகப் பாலீஷ்போட முடியும். மனத்தை ஒருமுகப்படுத்துகின்ற சமையல்காரனால் மிக நன்றாக சமைக்கமுடியும். பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்தக் காரியத்தை நன்றாகச் செய்யமுடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும். அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும். இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல்.