பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
05:06
கோயில்களில் குறிப்பாக, கோபுரங்களில் பலவிதமான சிற்பங்கள் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. நமது பாரத தேசத்தின் கலாசாரத்தையும், சிற்பசாஸ்திர வளர்ச்சியையும், தெய்வ பக்தியையும் வெளிப்படுத்துவதாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. கோயில் கோபுரத்தில் அமைந்துள்ள சிறபங்களுக்கும் தனிப்பெரும் சக்தியுண்டு. கும்பாபிஷேக சமயம் பூஜைகளும் உண்டு. இவற்றைத் தரிசித்தால், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதாக புண்ணியமும் உண்டு. இவற்றுக்கு பின்னம் (உடைதல்) ஏற்பட்டால் தோஷமும் உண்டு. ஆகவே, கோயில் கருவறையில் உள்ள சிலைகளை எவ்வாறு சாதாரண (கற்) சிலைகளாகப் பார்க்காமல், சக்தியுடைய தெய்வமாகவே பார்க்கிறோமே, அவ்வாறே கோயில் கோபுரங்களிலுள்ள சிற்பங்களையும் சாதாரணமான கலைச் சிற்பங்களாகப் பார்க்காமல், சிற்பங்களிலுள்ள (அந்தந்த) தெய்வங்களின் சான்னித்யங்கள் நிறைந்த தாகவே காண வேண்டும்.
ஆகவே, கோயில் சிற்பங்களை தெய்வமாகப் பார்த்தால் ஆபாசமாகத் தெரியாது. ஆபாசமாகப் பார்த்தால் சிற்பமோ சிலையோ தெய்வமாகத் தெரியாது. நாம் பார்க்கும் பார்வையில்தான் வேறுபாடு உள்ளது. ஒரு சமயம் குரு துரோணாச்சார்யார், சீடர்கள் துரியோதனன். தர்மபுத்ரர் ஆகிய இருவரையும் அழைத்து, “நீங்கள் இருவரும் இவ்வுலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். உலகில் நல்லவர் யார்? தீயவர் யார்? என அறிந்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார். உற்சாகமாகப் புறப்பட்ட அவ்விருவரும். பலகாலம் ஊரைச் சுற்றிவிட்டு, குருவிடம் வந்து சேர்ந்தார்கள். குருவிடம் துரியோதனன், “இவ்வுலகம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டேன். நல்லவர் என்பவரேயாரும். எங்கும் இல்லை. அனைவரிடமும் ஏதோ ஒரு குற்றம் இருக்கத்தான் செய்கிறது” என்றார். தர்மபுத்ரரோ, “குருவே! இவ்வுலகம் முழுவதும் சுற்றி வந்தேன். ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏதோ நல்ல குணம் (பண்பு) இருக்கத்தான் செய்கிறது. ஆகவே, எங்கும் நல்லவர்களே இருக்கிறார்களே தவிர, ஒரு தீயவரைக் கூடப் பார்க்க முடியவில்லை” என்றார். அவ்விருவர்களிடமும் குரு துரோணர் சொன்னார். “நாம் பார்க்கும் பார்வைக்கு ஒப்ப இவ்வுலகம் நல்லவையாகவும், தீயவையாகவும் காட்சியளிக்கும். ஆகவே, நல்லதாகவே பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்” என்றார். துரியோதனனின் பார்வையில் தீயவை மட்டுமே தென்பட்டது. தர்மபுத்ரர் பார்வையில் நல்லவை மட்டுமே தென்பட்டது. ஆகவே, பார்வைக்கேற்ப பொருட்படும் இவ்வுலகத்தில் பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்தே இவ்வுலகம் இருக்கிறது. கோயில் சிற்பங்களும் இவ்வகையில் சேர்ந்தவையே.