பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
05:06
கர்நாடகாவில் அமைந்திருக்கும் பேலூர், ஹலேபீடு ஆகிய இரண்டு இடங்களும் சிற்பக்கலையின் பெருமைக்குச் சாட்சியாக இருப்பவை ஆகும். பேலூர், ஹலேபீடு இவ்விரண்டும் நம் சிற்பக் கலையின் பெருமைக்கு மெருகூட்டும் கலைக் கூடங்கள். கர்நாடகக் கலைஞர்களின் திறனுக்குச் சின்னமாகத் திகழும் சிருங்கார கோயில்கள். மாமன்னர்களின் தெய்வ பக்தியையும் கலைத் தொண்டையும் என்றென்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் அற்புத சாதனைகள். அது சென்னகேசவப் பெருமாள் கோயில். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுவர்த்தனன் என்ற ஹாய்சால மன்னன் கட்டிய கோயில். அவன் நிறுவிய பஞ்ச நாராயணர்களில், இங்கு உறைபவர் ஸ்ரீகேசவநாராயணராவார். கற்பீடத்தைச் சேர்த்துச் சுமார் பதினைந்து அடி உயரமிருக்கும். கருங்கல்லாலான, கம்பீரமான அந்த உருவச் சிலை, ஜீவகளையோடு திகழ்கிறது.
அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலும் கருவறையின் நுழைவாயிலும், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிருங்காரக் கற்பலகைகள். இருபுறமும் நிற்கும் ஜய, விஜயர்கள் அழகு வடிவங்கள். நவரங்கம் என்று அழைக்கப்படும் மகா மண்டபத்தில் நிற்கும்போது பளிங்குச் சித்திரக் கூடத்தில் இருப்பது போன்ற ஓர் எண்ணம் தோன்றும். உயரே நிமிர்ந்து பார்த்தால், ஒரு தனிக் கலையுலகமே அங்கு காட்சி தரும். நான்கு மூலைகளிலுமுள்ள அழகு பிம்பங்களைக் காண்கிறோம். நடன கன்னிகையின் லாவண்யத்தில் மனதைப் பறி கொடுக்கும். நவரங்க மண்டபத்திலுள்ள ஒரு தூண் அனைவரது கவனத்தை மிகவும் ஈர்க்கும். அருகில் சென்று பார்த்தால். மேலிருந்து அடிவரை சிற்ப, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. அதில் எத்தனையோ தேவதைகள், தெய்வங்கள், புராண நிகழ்ச்சிகள், அதன் பெயர் நரசிம்ம தூண். அந்தக் கோயிலின் ஆகமம் முழுவதும் அதில் அடக்கமாயிருக்கிறது. இக்கோயிலில், சித்திரை மாதம் நடைபெறும் ரதோற்சவம், பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகிறார்கள். பிரதான கோயிலைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் பாரத, பாகவத, ராமாயணக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அந்த கோயிலில், ஒரு பொறியியல் அதிசயம் நிறைந்துள்ளன. அங்கு நாற்பதடி உயரமுள்ள ஒரு கற்கம்பம் இருக்கிறது. அது ஒரு பீடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், குனிந்து பார்த்தால், அந்த பீடத்திற்கும் கம்பத்திற்குமிடையே இடைவெளி இருப்பது தெரிகிறது. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மற்றொருபுறம் நன்றாகத் தெரியும்.