பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
11:06
சென்னை: பிரசித்தி பெற்ற வேளச்சேரி தண்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேளச்சேரியில் அமைந்துள்ளது, கருணாம்பிகை சமேத தண்டீசுவரர் கோவில். 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் அமைந்த தலம், வேதச்சிரோணி என அழைக்கப்பட்டது. தொண்டை மண்டல பேரரசர் சுந்தரசோழனால், கி.பி.957 – - 973ல், இக்கோவில் கட்டப்பட்டது.
யமதர்மன் தண்டத்தை மீட்பதற்காக, நாரதர் கூறிய படி வேத ச்சிரோணி சென்று, அங்கு ஒரு தீர்த்தகுளத்தை உருவாக்கி, சிவபெருமானை வழிபட்டு, தண்டத்தை மீட்டதாக புராணம் கூறுகிறது. அதன் காரணமாக அங்கு வீற்றிருக்கும் ஈசன், தண்டீசுவரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். தோஷங்கள் நிவர்த்திக்கு இத்தலத்தில் வழிபாடு நடத்தினால் மந்தகாசம், வயிற்று உளைவு, குஷ்டம், வாதம், காமாலை போன்ற நோய்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. இக் கோவிலில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமாரத சாந்தி ஆகியவை விமரிசையாக நடத்தப்படுகிறது. 2005ம் ஆண்டு இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று மீண்டும் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன் 8ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு எட்டு அவப்ருதயாகம் நடந்தது. அதை தொடர்ந்து, மகாபூர்ணா ஹூதி, யாத்ராதானம் நடந்தது.காலை , 6:00 மணிக்கு கலசப்புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து ராஜகோபுரம், பரிவாரங்கள், தண்டீசுவரர் சன்னதி ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து கருணாம்பிகை அம்மன் சன்னித்திக்கு கும்பாபிஷேகம், பின், சண்ட யாகமும் நடந்தது. கும்பாபிஷேகத்தை, நெசப்பாக்கம் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் நடத்தினர். கும்பாபிஷேக விழாவில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானின் அருளைப்பெற்றனர். காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வை பவமும், சுவாமி உட்புறப்பாடும் நடந்தது.