பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
01:06
பொன்னேரி : சித்தகண்ணீஸ்வர சுவாமி கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, காட்டாவூர் கிராமத்தில், அருந்தவள்ளி (எ) காளியம்மன் சமேத சித்தகண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. மராட்டிய மாமன்னர்
சத்ரபதி சிவாஜி வழிபட்ட கோவில் என, கூறப்படுகிறது.இக்கோவிலில், 1.50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 11ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள், அக்னி வேள்வி ஆகியவை நடத்தப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சித்தகண்ணீஸ்வர கோவில் சன்னதியின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், சித்தகண்ணீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கும்பாபிஷேக விழாவில், காட்டாவூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமானை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.