நபிகள் நாயகத்தைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். அவர் தனது இன்னொரு நண்பரை பற்றி மிகவும் புகழ்ச்சியாக கூறினார். அவர் செய்துள்ள நல்ல செயல்களுக்காக நிச்சயம் அவர் சுவனத்திற்கு (சொர்க்கம்) தான் செல்வார் என்றார். நாயகம் அவரது பேச்சை தடுத்து, நீர் உம் சகோதரரின் கழுத்தை அறுத்து விட்டீர், என்று மூன்று முறை அழுத்தமாக கூறினார். நண்பர் அதிர்ந்து விட்டார். நாயகம் தொடர்ந்தார். உங்களில் யாராவது மற்றவரைப் புகழ்ந்தால், அப்படி புகழ்வது அவசியமென்றால் புகழட்டும். நான் இன்னார் இப்படிப்பட்டவர் என்று கருதுகின்றேன். அல்லாஹ்வே அறிந்தவன், என்றார். அதாவது, ஒரு மனிதர் புகழ்ச்சிக்குரியவர் என்றாலும் கூட, அவர் நல்லவர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக இறைவனுக்கு ஒப்பிட்டு பேசக்கூடாது. சொர்க்கத்துக்கு செல்வார் என்றெல்லாம் சொல்லும் உரிமை நமக்கில்லை. உண்மையிலேயே, நல்லவர் என புகழப்படுவரின் மனதுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கத்தை அறியும் சக்தி இறைவனைத் தவிர யாருக்கும் இல்லை. மேலும் புகழப்படுபவருக்கு கர்வம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதன்மூலம் ஒருவரை கெடுத்த பாவத்திற்கும் நாம் ஆளாகலாம். எனவே, அளவுக்கு மீறிய புகழ்ச்சி கூடாது என்கிறார் நாயகம்.