ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் அன்பாயிரு, அன்பைத் தேடு என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கான காரணத்தை டாக்டரிடம் கேட்டார் ஒரு குழந்தையின் தந்தை. அதற்கு டாக்டர், எங்கள் மருத்துவமனையில் மிகச்சிறந்த சிகிச்சையை அளிக்கிறோம். ஆனாலும், பல குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்து கொண்டிருந்தனர். இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை. நான் ஒருநாள் யாரும் அறியாமல் மருத்துவமனை வார்டுகளில் உலா வந்தேன். அப்போது நர்ஸ்கள் குழந்தைகளுக்கு மருந்தைக் கொடுக்கும் போது, ஒழுங்கா குடி, சீக்கிரம் குடி, குடிக்காட்டி உயிரை எடுத்துடுவேன், என்றெல்லாம் மிரட்டியதைப் பார்த்தேன். குழந்தைகளும் அழுதபடியே அவர்களின் மிரட்டலுக்கு பயந்து மருந்தைக் குடித்து விட்டு, வாந்தி எடுத்தனர். அதை துடைக்க வேண்டிய ஆயாக்களோ, பிசாசே! ஏன் வாந்தி எடுத்து தொலைத்தே? என அடிக்க கையை ஓங்கினர். பிரச்னை எனக்கு புரிந்து விட்டது. மறுநாளே, குழந்தைகளை அன்புடன் கவனிக்க தாதிகள் தேவை என விளம்பரம் செய்தேன். ஏராளமானோர் வந்தனர்.
அவர்களில் சேவை மனப்பான்மையுடையவர்களைக் கண்டுபிடித்து பணியில் அமர்த்தினேன். இதற்காக அவர்கள் பணம் கூட கேட்பதில்லை. இப்போது கசப்பு மருந்தையும் இனிப்பாய் கருதி குழந்தைகள் குடிக்கிறார்கள். குழந்தைகளின் உயிருக்கும் பங்கமில்லாமல், மருத்துவமனைக்கு நற்பெயரும் வந்துள்ளது. எனவே அன்பைக் கடை பிடிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, இப்படி எழுதி வைத்துள்ளேன், என்றார். உங்களது அன்பானது, அறிவிலும், எல்லா உணர்விலும், இன்னும் அதிகமாய் பெருகக்கடவது என்கிறது பைபிள். அன்பைக் கடைபிடித்தால் எல்லா உயிர்களும் நன்றாயிருக்கும்.