பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம் : காஞ்சி வரதர் கோவில், கருடசேவையின் போது, பஜனை பாடல்களை பாடும், பஜனை கோஷ்டியினர், 108 திவ்ய தேசங்களின் பிரம்மோற்சவத்திற்கும் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் நடை பெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், பஜனை கோஷ்டியினர், பிரபல உற்சவத்தின் போது, சுவாமிக்கு பின்னால், பஜனை பாடல்களை பாடியபடி செல்கின்றனர். இவர்கள், 108 திவ்யதேச, வைணவ கோவில்களில், எங்கு பிரம்மோற்சவம் நடந்தாலும், குழுவாக சென்று, பஜனை பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜூன் 6ல், வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோற்சவம் துவங்கியபோது, காஞ்சிக்கு வந்த பஜனை கோஷ்டியினர். 10 நாட்களாக தங்கியிருந்து, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கருடசேவை தேரோட்டத்தின் போது, சுவாமிக்கு பின்னால், வாத்திய கருவிகளை இசைத்து, பஜனை பாடல்களை பாடியபடியும், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் போன்ற வேடமிட்டு, நடனமாடியும் சென்றனர்.
இவர்கள் தங்குவதற்காகவே, பெருமாள் கோவிலை சுற்றி, ததியாராதனை மடங்கள், மண்டபங்கள் அதிகம் உள்ளன. இங்கு, இவர்களுக்கு தேவையான, மூன்று வேளை உணவுடன், தங்குவதற்கு இடமும் தரப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும், நாட்களில், பிரதான ராஜகோபுரத்தின் கதவு, இரவில் மூடப் படுவதில்லை. இதனால், சிலர் கோவிலில் தங்கு கின்றனர். பிரம்மோற்சவம் முடிந்ததும், தங்கள் குழுவுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். எங்கள் வீரஆஞ்சநேயர் பஜனை குழுவில், 12 பேர் இருக்கிறோம். காஞ்சி வரதர் பிரம்மோற்சவம் முடிந்ததும், அடுத்த மாதம் துவங்கவுள்ள, மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவில், பிரம்மோற்சவத்திற்காக மீண்டும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வர உள்ளோம். புரட்டாசியில் திருப்பதிக்கும், மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துார் என வைணவ தலங்களுக்கு செல்வோம். கே.சடையப்ப கோபால தேசிகர் அத்தியூர் திருக்கை, விக்கிரவாண்டி