பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
12:06
நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல், நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான தேர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழுதானது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தேரை புதுப்பிக்க முடிவு செய்தனர். முதல்கட்டமாக தேர் பிரிக்கப்பட்டு, புதிய தேர் செய்வதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இந்த பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. இருப்பினும், திட்ட மதிப்பீடு தயார் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால், இப்பணி மந்தமாகவே நடந்து வந்தது. இரு ஆண்டுகளாக, தேர் இழுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: நாமகிரித்தாயார் சமேத நரசிம்மர் சுவாமி கோவில் தேர், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. திருவண்ணாமலையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், 10 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், இரண்டு மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.