பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
11:06
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமக்யா கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது. அசாமில், பா.ஜ.,வை சேர்ந்த சர்பானந்த சோனவால் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் கவுகாத்தியில் பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான, காமக்யா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் அம்புபாசி திருவிழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கவுகாத்தியில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று காலை, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவில் நடை மூடப்பட்டது.
கோவில் நடை முறைகளின் படி, நான்கு நாட்களுக்குப் பின்னரே, மீண்டும் நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நிலாச்சல் மலையில் அமைந்துள்ள இந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக, திரிபுரா, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கவுகாத்தியில் குவிந்து வருகின்றனர். சாதுக்கள், அகோரிகள் மட்டுமின்றி, உள்நாட்டு, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
டாக்டர்கள் தயார்! : பேரிடர் மீட்பு படையினர், போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்கு படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடையும் பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக, 100 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன் டாக்டர்கள் குழுவினரும், தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.