பதிவு செய்த நாள்
23
ஜூன்
2017
11:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி ஏலம் 5வது முறையாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிரசாத கடை மட்டும், 1.56 கோடி ரூபாய்க்கு நேற்று ஏலம் எடுக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மற்றும் பிரசாதம் தயாரிப்பதற்கு கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை, பொது ஏலம் விடப்படுகிறது. ஒத்திவைப்பு கடந்தாண்டிற்கான ஏலம், இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நடப்பாண்டிற்கான தலைமுடி மற்றும் பிரசாத கடைக்கு ஏலம், ஏப்ரல் மாதம், 21ம் தேதி தலைமை கோவில் அலுவலகத்தில் முதல் முறையாக நடந்தது.கடந்த ஏலத்தொகையை விட, 15 சதவீதம் தொகை அதிகரித்து, தலைமுடி ஏலத்தொகை, 2.50 கோடியும், பிரசாத கடை ஏலத்தொகை, 1.50 கோடியும் நிர்ணயம் செய்து கோவில் நிர்வாகம் ஏலம் விட்டது.
தலைமுடி, பிரசாத கடை ஏலத்தை யாரும் எடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து, கடந்த மாதம், 10ம் தேதி, இரண்டாவது முறையாகவும், 22ம் தேதி மூன்றாவது முறையாகவும், இம்மாதம், 15ம் தேதி நான்காவது முறையாகவும் ஏலம் விட்டனர்.அப்போதும், ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வராததால், மறுதேதி அறிவிப்பு இல்லாமல், ஏலம் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று, ஐந்தாவது முறை, கோவில் தலைமை அலுவலகத்தில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் சிவாஜி, வேலுார் இந்து சமய அறநிலைய துறை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் தலைமுடி, பிரசாத கடைக்கு டெண்டர் விடப்பட்டது. காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது. இதில், பிரசாத கடை மட்டும் ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பம் பெட்டியில் போட்டு இருந்தனர். தலைமுடிக்கு ஏலம் எடுக்க, விண்ணப்பம் பெட்டியில் போடவில்லை. இதனால், ஐந்தாவது முறையாக, தலைமுடி ஏலம், மறுதேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
ரூ.3 லட்சம்: அதே நேரத்தில், பிரசாத கடை மட்டும், 1.56 கோடி ரூபாய்க்கு ஹரிஹரமுத்து-ராமன் ஆகியோர் ஏலம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பிரசாத கடை ஹரிஹரமுத்து-ராமன் ஆகியோர், 1.53 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டை விட, வெறும், 3 லட்சம் ரூபாய் அதிகமாக தான் ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.