பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
11:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை நடக்கிறது. உற்சவ நாள்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகரின் திருப்பொன்னுாஞ்சல் பதிகம் ஒன்பது பாடல்கள் தல ஓதுவாரால் ஓதப்பட்டு, நாதஸ்வர வித்வான்கள் ஒன்பது வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி சேர்த்தி சேர்வர்.ஆனி உத்திரம்: ஜூன் 29 இரவு முதல் ஆனி உத்திரம், மறுநாள் (ஜூன் 30) பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகமும், இரவு பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மாசி வீதி புறப்பாடும் நடக்கிறது. ஜூன் 29ல் நள்ளிரவு 3:00 மணிக்கு பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பிரதான மாறியாடுவார்.
நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோயில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமியம்மனுக்கு சுவாமி கோயில் 100 கால் மண்டபத்திலும், ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். கால பூஜைகள் முடிந்ததும் காலை 7:00 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் நான்கு மாசி வீதிகளில் புறப்பாடாகும். விழாவை முன்னிட்டு அபிஷேகப் பொருட்களை ஜூன் 28 முதல் கோயிலில் வழங்கலாம். ஆனி முப்பழ அபிஷேகம்: ஆகம விதிப்படி ஒவ்வொரு பருவ காலத்திற்கும், ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. ஆனி மாத பவுர்ணமியன்று ஜூலை 8 ல் உச்சிகால வேளையில் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ அபிஷேகம் நடக்கிறது. ஆனி முப்பழ அபிஷேக பூஜையன்று நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கிறது. ஜூன் 28 ல் மாணிக்கவாசகர் திருநட்சத்திரம் மற்றும் ஜூலை 8 ல் அருணகிரிநாதர் ஜெயந்தியை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு நான்கு ஆவணி மூல வீதி புறப்பாடு நடக்கிறது. உற்சவ நாட்களான ஜூன் 29 முதல் ஜூலை 8 வரை கோயில் சார்பில், உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.