பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
01:06
வேலூர்: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 1,000 சண்டி யாகத்தை, 70 சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர், என, முரளிதர சாமிகள் கூறினார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில், தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு சகல ஐஸ்வர்யம் தரும் ஸஹஸ்ர சண்டியாகம், ஜூலை, 23 முதல், 30 வரை, எட்டு நாட்கள் 1,000 முறை நடக்கிறது.
ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீபுரம் ராமகிருஷ்ண சர்மா தலைமையில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனா, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, மும்பை ஆகிய இடங்களில் இருந்து, 70 சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்துகின்றனர்.
இதையொட்டி தினமும், 27 ஹோமம் நடக்கிறது. 700 ஸ்லோகம், 13 அத்தியாயங்களுடன், 1,000 முறை தினமும் பாராயணம் நடக்கிறது. இதற்காக ஜூலை, 23 காலை, 7:00 மணிக்கு கோ
பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்குகிறது. கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹாலஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், யோகினி பைரவர் பலி பூஜைகள், ருத்த ஜபம், லலிதா
சகஸ்ர நாம பாராயணம், துர்காஷ்டமி தேவி மஹாத்மியம் பாராயணம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை என தொடர்ந்து நடக்கிறது. உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் சண்டியாகம் நடக்கிறது. மேலும் மண் வளம், மழை வளம், இயற்கை நலன், விவசாயிகளின் நலம், ஆரோக்கியத்திற்காக கோமாதாவுக்கும், காளை மாட்டுக்கும்
திருமண விழா, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஜூலை, 21 காலை, 9:15 மணி முதல், 10:15 க்குள் நடக்கிறது. மனிதர்களுக்கு திருமணம் நடப்பதை போலவே, திருமண பத்திரிகை அச்சடித்து இந்த திருமணம் மூன்று நாட்கள் நடக்கிறது. ஜூலை, 9ல், தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு கோடி தீபத்துடன், ஒரு கோடி அர்ச்சனை ஆரம்பமாகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.