பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
01:06
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, முத்தத்திராயன் சுவாமிக்கு அமாவாசையையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட, நெருப்பூர் அருகே எழுந்தருளியுள்ள முத்தத்திராயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், சந்தனமர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால், வீரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நேற்று,
அமாவாசை என்பதால் நெருப்பூர், ஒட்டனூர், காட்டூர், நாகமரை, பண்ணவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுவாமி சிலையை தூக்கி வந்த பக்தர்கள், கோவிலை சுற்றிலும் வலம் வந்தனர். அப்போது, பக்தர்கள் சாலையில் படுத்திருக்க, அவர்களை தாண்டி சுவாமி சிலை எடுத்து செல்லப்பட்டது. இதனால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். அதேசமயம், கோவிலை சுற்றியுள்ள
சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால், பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். வாகன ஓட்டிகளுக்கு, வாகனங்கள் நிறுத்த வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என, கோவில்
நிர்வாகத்தின் மீது பக்தர்கள் குற்றம் சாட்டினர்.