பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
12:06
அனுப்பர்பாளையம் : திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டனில், வள்ளி தேவசேனா உடனமர் சண்முகநாதர் கோவில், புதியதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் நடைபெற்றது. முன்னதாக, காலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், திருவருட சக்திகளை இறை திருமேனிக்கு அளித்தல், முழு நிறைவேள்வி, மகா பூர்ணாகுதி, திருக்குடம் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு கோபுர விமானங்களுக்கு நன்னீராட்டு கும்பாபிஷேகம், 7:15 மணிக்கு அவிநாசி ஆதீனம் காமாட்சிதாஸ சுவாமிகள் தலைமையில், சண்முகநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தசதானம், தசதரிசனம், மஹாஅபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சண்முகநாதர் அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதம், அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.