பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
12:06
பொள்ளாச்சி: ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அதனால், மன்னர்கள் காலந்தொட்டு குடியிருக்கும் பகுதிகளில் கோவில் எழுப்பப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள, நெகமம் வடசித்துாரில் ஸ்ரீ கண்டியம்மன், தாந்தோணியம்மன் ஊரின் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ளார். ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ., தொலைவில் கண்டியம்மன், தாந்தோணியம்மன் இரு கருவறைகளில் அருள்பாலிப்பது சிறப்பாகும். 400 ஆண்டுகள் பழமையான கோவிலில். இரு தெய்வங்களும், எட்டு கரங்களுடன், அரக்கனை வதம் செய்து ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். ஊருக்கும், மற்றவர்களுக்கும் துரோகம் நினைப்பவர்கள், தன்னொழுக்கம் தவறியவர்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது. அதையும் மீறி கோவிலுக்குள் நுழைந்தால், சக்தி வாய்ந்த சர்ப்பம் வந்து தடுக்கும் என, முந்தைய சம்பவங்களை நினைவு கூர்கின்றனர் கிராம மக்கள்.
கோவிலுக்கு நேர்த்திக்கடனாக, கோழி, ஆடு, மாடு விடுவதில்லை. கோவில் வளாகத்தில் உயிரினங்கள் பலி கொடுப்பதில்லை. அம்மன் சன்னதியாக இருந்தாலும், சைவ முறையே கடைபிடிக்கப்படுகிறது. கோவிலுக்கு அருகில், கால்நடைகளை பலி கொடுத்தவர்களை அம்மன் தண்டித்ததாகவும் கூறுகிறார் கோவில் பூசாரி. ஊர்மக்கள் இக்கோவிலில் அம்மன் உத்தரவு பெற்றே, பொன் வாங்குவது, பூமி வாங்குவது, பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுகின்றனர். தவறு செய்பவர்களை தண்டித்து, ஊருக்கு காவலாக இருக்கும் அம்மன், ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒலி மயமாக சுடர் விடுகிறார். கோவிலின் தலவிருட்சமாக துரத்தி மரம் உள்ளது. இம்மரத்தடியில் கன்னிமார் தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில், வேப்பமரம், வில்வ மரங்களும் உள்ளன. கோவிலுக்கு தென்கிழக்கு திசையில் தீர்த்த கிணறு உள்ளது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது. கோவில் நிலத்தில் கிடைக்கும் வருமானத்தில் பூஜைகள் நடக்கிறது. அமாவாசை நாட்களில், 16 வகை மருந்துகள் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜையுடன் அன்ன தானமும் நடக்கிறது.