பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
12:06
திருப்பூர் : திருப்பூர் அருகே, புலி குத்திக்கல் மூலவராக கொண்ட கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையான, தென்சேரிமலை அருகிலுள்ள, எஸ்.குமாரபாளையத்தில், 17ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் எழுத்துக்களுடன் கூடிய புலி குத்திக்கல், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டு பிடித்தனர்.கால்நடைகளை காக்கும் வகையில், புலிகளுடன் சண்டையிட்டு, வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக எடுக்கப்பட்ட நடு கல்லாகவும், இதுவரை கிடைத்த புலி குத்தி கல்களில், சிறப்பானதாக, தமிழில் மூன்று வரிகளை கொண்ட செய்தியாக, "புலி குத்தி பொடா ரப்ப கவுண்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது.இதையறிந்த கிராம மக்கள் மற்றும் குலதெய்வமாக கொண்டவர்கள் இணைந்து, புதிதாக கோவில் கட்டினர். கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00க்கு, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. அதன்பின், கோபுரம் மற்றும் மூலவருக்கு, புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.