சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
சபரிமலையில் 10 நாள் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு புதிய கொடிமரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்ததால் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 25-ம் தேதி புதிய தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவிழா காலை தொடங்கியது. காலை 8.40 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு பூஜை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து கொடிப்பட்டம் மேளதாளத்துடன் கோயிலை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. கொடிமரசுவட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தினார். காலை 9.15 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
ஜூலை இரண்டாம் தேதி ஐந்தாம் திருவிழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை ஸ்ரீபூதபலியுடன், யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை ஆறாம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். ஏழாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். இதற்காக காலையில் உஷபூஜை முடிந்ததும் சுவாமி யானை மீது பவனியாக பம்பைக்கு புறப்படுவார். தொடர்ந்து நடை அடைக்கப்படும். ஆராட்டு பவனி அன்று இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். காலையில் சபரிமலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.