பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
10:06
குறிச்சி : போத்தனுாரிலுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். போத்தனுாரிலுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின், 54ம் ஆண்டு பூச்சாட்டு விழா, நேற்று முன்தினம் காலை, மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. இரவு, அக்னி கம்பம் நடுதல் நடந்தது. நேற்று காலை, நஞ்சப்பணை சீதா தோட்டத்திலிருந்து, அம்மன் சக்தி கரகம், பூவோடு எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து, கோவிலின் முன் அமைக்கப்பட்ட தீ குண்டத்தில், சக்தி கரகம் எடுத்து வந்த மூவர் முதலிலும், அவர்களையடுத்து, பூசாரி சீனிவாசனும் இறங்கினர். இதையடுத்து ஆண்களும், பெண்களும் என ஏராளமான பக்தர்கள், பக்திப்பரவசத்துடன் குண்டம் இறங்கி, தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். மாலையில், நஞ்சுண்டாபுரம் ரோட்டிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலிலிருந்து, பூவோடு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து, மாவிளக்கு வழிபாடு நடந்தது. திரளானோர் அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று மாலை, 5:00 மணிக்கு அம்மன் திருவீதி ஊர்வலம் நடக்கிறது. நாளை மதியம் மகா அபிஷேகம் மற்றும் அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.