பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
10:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜூலை, 6ல், ஆனி பிரம்மோற்சவம் துவங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், தட்சணாயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் ஆனி பிரம்மோற்சவம், மிகவும் சிறப்புக்குரியது. இந்த பிரம்மோற்சவம், வரும், 6ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில், வரும், 6 காலை, 5:30 மணி முதல், 6:35 மணிக்குள், வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கொடியேற்ற உள்ளனர். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருள்வர். அதை தொடந்து, விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆனி பிரம்மோற்சவத்தில், தொடர்ச்சியாக, பத்து நாட்களுக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி மாட வீதி உலாவும் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் நிறைவாக வரும், 16ல், அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.