பதிவு செய்த நாள்
30
ஜூன்
2017
10:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சன தேரோட்டம் நேற்று
நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கடலுார்
மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சனம் திருவிழாவில்,
ஒன்பதாம் நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு,
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை,
6:00 மணிக்கு, சித்சபையில் இருந்து, தேரில் நடராஜர் எழுந்தருளினார். காலை,
7:45 மணிக்கு, விநாயகர், சுப்ரமணியர், ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்மன்,
சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து
தேரை இழுத்தனர். மாலை, 4:00 மணிக்கு, பருவதராஜ குருகுல சமூகத்தினரின் முதல்
மரியாதைக்கு பின், மாலை, 6:00 மணிக்கு, கீழ் சன்னதி நிலைக்கு தேர்
வந்தடைந்தது. தேரில் இருந்து இறங்கிய சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜரை,
மாணிக்கவாசகர் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் வைபவம் நடந்தது. பின்,
ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளி சுவாமி அருள்பாலித்தார். இரவு,
லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, மகா அபிஷேகம்
நடக்கிறது. தொடர்ந்து, சுவாமி திருவாபரண அலங்காரத்தில் ராஜசபையில்
அருள்பாலிக்கிறார். மதியம், மகா தரிசனம் நடக்கிறது.