சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: பல்லாயிரகனக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2017 05:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடனமாடி வந்த நடராஜர் சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு உற்சவம் நடக்கிறது. உற்சவத்தில் முக்கிய விழாவான நடராஜர் தேரோட்டம் நேற்று நடந்தது. மகா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு லட்சார்சனை, மகா அபிஷேகம் நடைப்பெற்று திருவாபாரண அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதிகாரிகள் தீட்சிதர்கள் இடையே மோதல்: ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தில் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீட்சிதர்களின் கெடுபிடியால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்து ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் எஸ்.பி., விஜயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே செல்லும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பலன் இல்லாமல், தீட்சிதர்கள் இரும்பு கேட் பூட்டி சாவியை தங்கள் பொறுப்பில் வைத்துக்கொண்டு, தங்களுக்கு வேண்டிய பட்டவர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு போலீஸ் அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் திணறினர். மதியம் 12.15 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கலெக்டர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிதம்பரம் தாசில்தார் மகேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமை செயலக அதிகாரிகளை சுவாமி தரிசனம் செய்ய உள்ளே அழைத்து சென்றனர்.
அப்போது கேட் வாசலில் நின்ற தீட்சிதர்கள் கும்பல், அவர்களை வழிமறித்து உள்ளே வரக்கூடாது என எச்சரித்தனர். அதற்கு சிதம்பரம் வருவாய்த்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என தெரிவித்தும் இது எங்கள் கோவில், உங்களுக்கு அனுமதி இல்லை என கூறி ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அதிகாரிகள் திகைத்துபோய் நின்றனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தீட்சிதர்களுக்கும் பயங்கர வாக்குவதாம் நடந்ததால் ஆயிரங்கால் மண்டபத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். வருவாய்த்துறையினர் புகார் கொடுக்க உள்ளதால் தீட்சிதர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர்.