பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
01:07
அன்னுார் :ஆயிரம் ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவிலில், 1.5 கோடி ரூபாயில், கும்பாபிஷேக திருப்பணி நடக்கிறது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில், ஞானிகளாலும், மன்னர்களாலும் வழிபடப்பட்ட பெருமையுடையது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 13 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதையடுத்து திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதில், 15 அடி உயரத்தில், 70 அடி நீளம், 40 அடி அகலத்தில், முன் மண்டபம் கட்டுதல், ராஜகோபுரத்திலுள்ள சுதைகளை புதுப்பித்தல், அனைத்திற்கும் பஞ்சவர்ண பெயின்டிங் செய்தல் என, 1.5 கோடி ரூபாயில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேற்கு வாசல் ராஜ கோபுரத்திற்கு சாரம் கட்டப்பட்டு, சுதைகளை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மன்னீஸ்வரர் கருவறை விமானம், அருந்தவச்செல்வி கருவறை விமானம், முருகப்பெருமான் சன்னிதி விமானம் ஆகியவற்றுக்கும் சாரம் கட்டப்பட்டு, பணிகள் நடக்கின்றன. முன் மண்டபம் கட்ட பில்லர்களுக்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆறு மாதத்திற்குள் பணி முடித்து, டிசம்பரில், கும்பாபிஷேகம் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது.திருப்பணி செலவு முழுக்க, உபயதாரர்கள் மூலம் செய்யப்படுகிறது’ என திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர்.