ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணமழை கொட்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2017 05:07
மன உறுதி மிக்க ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் பணமழை கொட்டும் சிறப்பான மாதமாக அமையும். கடந்த மாதம் சாதகமற்ற இடத்தில் இருந்த சூரியன், இந்த மாதம் 3-ம் இடமான கடகத்திற்கு செல்வதால் முன்னேற்றம் உண்டாகும். ஜூலை 26ல் சுக்கிரன் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் நன்மையளிப்பார். புதன் ஜூலை 21-ல் சிம்மத்திற்கு மாறி சுப பலன் தருவார். குரு, செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர்.
ராகு 4-ம் இடமான சிம்ம ராசியில் இருந்து வீண் கலகம், அலைச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். குடும்பத்தில் பிரிவையும் உருவாக்கி இருக்கலாம். அவர் ஜூலை27ல் 3-ம் இடமான கடகத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார். குறிப்பாக பணவரவு மிக அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
கேது ஜூலை 26 வரை சில பிரச்னைகளை தருவார். அதன்பின் அவர் 9-ம் இடமான மகரத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல என்றாலும், அவரால் இருந்து வந்த உடல் நலக்குறைவு குணம் அடையும். அதே நேரம் சில திட்டங்கள் இழுத்தடிக்கும். மொத்தத்தில் முக்கிய கிரகங்கள் சாதகமான இடத்தில் இருப்பதால் அனுகூலமான பலன் அதிகம் இருக்கும். புதனால் பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன ஜூலை 20-க்கு பிறகு மறையும். அதன் பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்திற்கு தெய்வ அனுகூலம் தொடர்ந்து இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பெண்கள் வகையில் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஜூலை20-க்கு பிறகு கணவன் -மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். ஜூலை 19,20 ஆக.15, 16-ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஆக.11, 12ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 25, 26, 27ல் அவர்கள் வகையில் பிரச்னை வர வாய்ப்பு உண்டு. ஒதுங்கி இருக்கவும். ஜூலை 23, 24-ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். ஜூலை 25-க்கு பிறகு திருட்டு, களவு போன்ற இடர்பாடுகள் மறையும். ஆக., 5-க்கு பிறகு சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஜூலை 25-க்கு பிறகு அரசின் சலுகை மற்றும் வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை 26- முதல் ராகு மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். ஜூலை17, 18, 21, 22 ஆக. 13,14-ல் தேக்கநிலை இருக்கும். இந்நாட்களில் வரவு செலவை நீங்களே கண்காணிக்க வேண்டும். ஜூலை 30,31-ல் எதிர்பாராத அளவு விற்பனை இருக்கும்.
பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர். மாதத் தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கும். கோரிக்கைகள் முயற்சியின் பேரில் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஜூலை 21- முதல் ஆக., 5- வரை விரும்பிய இடத்திற்கு மாற்றம், சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட உன்னத பலன்களைக் காணலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜூலை 25-க்கு பிறகு அரசிடம் இருந்து விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். பணப் புழக்கத்திற்கு எந்தக் குறையும் இருக்காது. எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆக. 10, 11, 12-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு ஜூலை 21- முதல் ஆக.6- வரை முன்னேற்ற பலன் இருக்கும். புதிய படிப்பில் சேர இந்த நாட்களுக்குள் முயற்சி எடுப்பது நல்லது.
விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறை இருக்காது. கால்நடை செல்வம் பெருகும். கரும்பு, எள், கொள்ளு பயிர்களில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குதூகுலமாக இருப்பர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம்.
நல்ல நாள்: ஜூலை 19,20,25,26,27,30,31 ஆக. 1,2,3,9,10,11,12,15,16. கவன நாள்: ஆக.4,5- சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: ஆரஞ்சு, வயலட்