பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
01:07
ஆர்.கே.பேட்டை : பொம்மராஜிபேட்டை, படவேட்டம்மனுக்கு, வரும் 28ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பொதட்டூர்பேட்டை அடுத்துள்ள பொம்மராஜிபேட்டை கிராமத்தின் தெற்கே அமைந்துள்ளது படவேட்டம்மன் கோவில். இந்த கோவில் புதுப்பிக்கும் பணி, கிராமவாசிகளின் பங்களிப்புடன், இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டமாக தற்போது, வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 28ம் தேதி, ஆடி 12ல், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கான யாகசாலை பூஜை, 26ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, அஷ்டதசாகிரயைக்கு கண் திறப்பு செய்யப்படுகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு, பிரவேச பலி, மகாபூர்ணாஹூதி நடைபெறும். மறுநாள், காலை 7:00 மணிக்கு, அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். 28ம் தேதி, காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று மாலை, படவேட்டம்மன் உற்சவர், வீதியுலா எழுத்தருளுகிறார். அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.