பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
01:07
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முதுகில் அலகு குத்தி, கிரேன் மூலம் தொங்கியபடி வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை நகரில் உள்ள உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி மாரியம்மன், எல்லம்மன், பட்டாளம்மன், கங்கையம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. கடந்த வாரம் காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு அக்னி குண்டம் இறங்கினர். தொடர்ந்து நேற்று காலை, அந்தந்த மாரியம்மன் கோவில்களில் இருந்து, வாய் மற்றும் முதுகில் அலகு குத்திய பக்தர்கள், கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்தி, அதில் கயிற்றை கட்டி, லாரி, கார், டெம்போ, ஆட்டோ ஆகியவற்றை இழுத்து சென்றனர். இறுதியில் மந்தைவெளி மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, விரதத்தை முடித்தனர். பின் ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, நேற்று தேன்கனிக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகர் முழுவதும் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.